நம் குரல்

Monday, June 26, 2017

சீ.முத்துசாமியின் 'இருளுள் அலையும் குரல்கள்'


குரலற்றவர்களின் குரல்


   

உயிர் உருக்கும் அந்தக் குரல்
காற்றுவெளியில்
கவனம் ஈர்க்க
எங்கும் நீக்கமற நிறைகிறது

இடைவிடாது ஒலித்தும்
யார் காதுக்கும் கேட்பதில்லை
அவர்களின் குரல்

தோல் தடித்த காதுகள்
சில ஒலிகளை  மட்டும்
எப்பொழுதும் உள்வாங்குவதில்லை

அவர்கள்
பாலைவனத்தில் சுடுமணல்
கடந்து பயணிக்கிறார்கள்
அகதிமுகாம்களில் நீண்ட வரிசையில்
நிற்கிறார்கள்
வாழுமிடங்களை  நெருங்கிவரும்                      
இயந்திரங்களைப் பார்க்கிறார்கள்
சாலையோரங்களில் கடந்துபோகும்
மனிதர்களிடம் கையேந்துகிறார்கள்
போரில் சிதலமான வீடுகள் முன்
செய்வதறியாது கலங்குகிறார்கள்

அவர்கள்
குறைந்த வருமானத்தில்
வாழ்வதறியாது தவிக்கிறார்கள்                                
தீவிரவாதத் தாக்குதலில்
சிதைந்த உடல் உறுப்புகளோடு                                
நடமாடுகிறார்கள்
பேச்சுரிமைகள் மறுக்கப்படுவதால்                          
தமக்குள்ளாக முணகுகிறார்கள்      

அவர்கள்                   
மதத்தின் கைகள் தங்கள் கழுத்தை
இறுக்குவதைப் பொறுக்காமல்
புலம்புகிறார்கள்                                                                    
அதிகார பீடங்கள் தங்களைக்
கீழே தள்ளி எழுப்பப்படுவதால்
துடிக்கிறார்கள்                                                                                 

நம் முகங்களின் சாயல்களில்
அவர்கள் முகங்கள் இருந்தும்
நாம் அவர்களை எளிதாய்க்
கடந்து போகிறோம்

காதில் விழும் ஏதேதோ ஒலிகளை
இரசித்துத்  தலையசைத்தவாறு






மழையொடு நனைதல்




எல்லாவற்றையும் நனைத்துவிடும் தீரத்தோடு
வானிலிருந்து விடைகொண்டு
பூமிநோக்கி விரைகின்றன
மழைத்தாரைகள்

சிறுமி ஒருத்தி கைகளை உயர்த்தி
மழையின் குளிர்ச்சியை  உணர்ந்தவாறு
மழையோடு உரையாடுகிறாள்  
அவள் கால்கள்
மழைநீரில் கோலங்கள் வரைய
குதூகலத்தில் நிறைகிறாள்

மழைத்துளிகள் சொட்ட சொட்ட
இறுகியிருக்கும் சிலரின் மனத்தாழ்ப்பாள்
நெகிழ்கிறது                                                        

மழைச்சாரல் உடல் நனைத்து
இருமனங்களின் இடைவெளி குறைத்து
அன்புத்தூறலைத்  தொடக்கி வைக்கிறது  
        
மழையின் கோரத்தாண்டவம்
நினைவுப் பள்ளத்தில்
தீராத மோகத்தை நிரப்பியவாறு                      
அலைக்கழிக்கிறது              
                            

ஒரு மழைநாள்
நினைவூஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும்
இன்னொரு மறக்கவியலா  மழைநாளை
அழைத்து வருகிறது                                           

ஒவ்வொரு மழைத்துளியிலும்
கலந்து கரைகிறது
வெம்மையின் பெருமூச்சு                                  

ஒவ்வொரு மழைத்துளியிலும்
எப்படியோ கலந்து விடுகிறது
மண்ணின் மணம்
                                        
மழைக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது
உடலை மட்டுமின்றி
உயிரையும் நனைக்கும் மாயம்                                   

மழையில் நனைந்து மழையொடு
கலந்து கரையும் சிறுமி
தான் தாயான காலத்தில்
கவனமாயிருக்கிறாள்                                                     

சன்னலின் வழியே
மழைபார்த்து ரசிக்க
சிறுமியான தன் மகளை அனுமதிக்கிறாள்                     

                                               

நடந்து முடிந்த தேர்தலில்


நடந்து முடிந்த தேர்தலில்
யார் வெற்றியாளர் என அறிந்துகொள்ள
பரபரப்புக் காய்ச்சல் எல்லார் மனங்களிலும்
பரவியிருந்தது

பக்கம் பக்கமாக எழுதிய எழுத்துகள்
பலரின் மனத்தை வளைத்திருக்கலாம்
நம்பிக்கை விதைகள் இதய இடுக்களில்
தவறியாவது விழுந்திருக்கலாம்
விடியலின் கீற்றுகள் நுழைய
கதவுகள் திறக்கலாம்
பலரின் எண்ணங்களில்
எதிர்பார்ப்பு இழைகள்
பின்னத் தொடங்கின

பல்முனைத் தாக்குதல்களுக்கும்
மௌனமொழியால் உரக்கப் பேசி
நிராயுதபாணியாய்
மார்பு காட்டி நின்றவர்கள்                                        
நம்பிக்கைத் தோணியைப் பற்றியவாறு
ஆயுதங்களை நம்பாமல்
மனங்களோடு பேசிப்பேசி
வியூகங்களை வகுக்க
பலரின் எண்ணங்களில்
எட்டிப்பார்க்கவேயில்லை
புயல் பற்றிய கவலைகள்

தேர்தலின் முடிவு எந்நேரத்திலும்
வந்துவிடும் என அறிவிப்பு வந்தது

காத்திருந்த
அந்த நெருப்பு நிமிடங்களில்தான்
அதுவரை பெயரறிந்து முகமறியாதவர்களோடு
கைகுலுக்கிக் கொள்ள முடிந்தது

எழுதிக்குவித்த விரல்களைப் பற்றி
அவற்றின் ஸ்பரிசம் உணர்ந்து
பழைய படைப்புகளின் மீது
பயணிக்க முடிந்தது                               

முதுமையெனும் முரடனிடம்
வண்ணம் இழந்தாலும்
நம்பிக்கையிழக்காத உள்ளங்களோடு
உறவாட முடிந்தது.

எழுதியெழுதி ஓய்ந்து கிடந்தவர்கள்
எழுந்து வந்திருந்தார்கள்
நீங்களா அவர்?
எனப் புருவ விளிம்புகள்
ஆங்காங்கே உயர்ந்தன

எதிர்பார்த்த தருணம் வந்தது

பதிந்துகொண்டவர்களைவிட
பதிவான மொத்த வாக்குகளில்
ஒன்று கூடுதலாக கணக்கில் வந்ததால்

யாரும் வெற்றிபெறவில்லை என்று
அறிவித்தார்கள்