மனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்
நம் குரல்
Monday, June 26, 2017
குரலற்றவர்களின் குரல்
உயிர்
உருக்கும் அந்தக் குரல்
காற்றுவெளியில்
கவனம் ஈர்க்க
எங்கும்
நீக்கமற நிறைகிறது
இடைவிடாது
ஒலித்தும்
யார் காதுக்கும்
கேட்பதில்லை
அவர்களின்
குரல்
தோல் தடித்த
காதுகள்
சில
ஒலிகளை மட்டும்
எப்பொழுதும்
உள்வாங்குவதில்லை
அவர்கள்
பாலைவனத்தில்
சுடுமணல்
கடந்து
பயணிக்கிறார்கள்
அகதிமுகாம்களில்
நீண்ட வரிசையில்
நிற்கிறார்கள்
வாழுமிடங்களை நெருங்கிவரும்
இயந்திரங்களைப்
பார்க்கிறார்கள்
சாலையோரங்களில்
கடந்துபோகும்
மனிதர்களிடம்
கையேந்துகிறார்கள்
போரில் சிதலமான
வீடுகள் முன்
செய்வதறியாது
கலங்குகிறார்கள்
அவர்கள்
குறைந்த
வருமானத்தில்
வாழ்வதறியாது
தவிக்கிறார்கள்
தீவிரவாதத்
தாக்குதலில்
சிதைந்த உடல்
உறுப்புகளோடு
நடமாடுகிறார்கள்
பேச்சுரிமைகள்
மறுக்கப்படுவதால்
தமக்குள்ளாக
முணகுகிறார்கள்
அவர்கள்
மதத்தின் கைகள்
தங்கள் கழுத்தை
இறுக்குவதைப்
பொறுக்காமல்
புலம்புகிறார்கள்
அதிகார
பீடங்கள் தங்களைக்
கீழே தள்ளி
எழுப்பப்படுவதால்
துடிக்கிறார்கள்
நம் முகங்களின்
சாயல்களில்
அவர்கள்
முகங்கள் இருந்தும்
நாம் அவர்களை
எளிதாய்க்
கடந்து
போகிறோம்
காதில் விழும்
ஏதேதோ ஒலிகளை
இரசித்துத் தலையசைத்தவாறு
மழையொடு நனைதல்
எல்லாவற்றையும் நனைத்துவிடும் தீரத்தோடு
வானிலிருந்து விடைகொண்டு
பூமிநோக்கி விரைகின்றன
மழைத்தாரைகள்
சிறுமி ஒருத்தி கைகளை உயர்த்தி
மழையின் குளிர்ச்சியை உணர்ந்தவாறு
மழையோடு உரையாடுகிறாள்
அவள் கால்கள்
மழைநீரில் கோலங்கள் வரைய
குதூகலத்தில் நிறைகிறாள்
மழைத்துளிகள் சொட்ட சொட்ட
இறுகியிருக்கும் சிலரின் மனத்தாழ்ப்பாள்
நெகிழ்கிறது
மழைச்சாரல் உடல் நனைத்து
இருமனங்களின் இடைவெளி குறைத்து
அன்புத்தூறலைத் தொடக்கி
வைக்கிறது
மழையின் கோரத்தாண்டவம்
நினைவுப் பள்ளத்தில்
தீராத மோகத்தை நிரப்பியவாறு
அலைக்கழிக்கிறது
ஒரு மழைநாள்
நினைவூஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும்
இன்னொரு மறக்கவியலா மழைநாளை
அழைத்து வருகிறது
ஒவ்வொரு மழைத்துளியிலும்
கலந்து கரைகிறது
வெம்மையின் பெருமூச்சு
ஒவ்வொரு மழைத்துளியிலும்
எப்படியோ கலந்து விடுகிறது
மண்ணின் மணம்
மழைக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது
உடலை மட்டுமின்றி
உயிரையும் நனைக்கும் மாயம்
மழையில் நனைந்து மழையொடு
கலந்து கரையும் சிறுமி
தான் தாயான காலத்தில்
கவனமாயிருக்கிறாள்
சன்னலின் வழியே
மழைபார்த்து ரசிக்க
சிறுமியான தன் மகளை அனுமதிக்கிறாள்
நடந்து முடிந்த தேர்தலில்
நடந்து முடிந்த தேர்தலில்
யார் வெற்றியாளர் என அறிந்துகொள்ள
பரபரப்புக் காய்ச்சல் எல்லார்
மனங்களிலும்
பரவியிருந்தது
பக்கம் பக்கமாக எழுதிய எழுத்துகள்
பலரின் மனத்தை வளைத்திருக்கலாம்
நம்பிக்கை விதைகள் இதய இடுக்களில்
தவறியாவது விழுந்திருக்கலாம்
விடியலின் கீற்றுகள் நுழைய
கதவுகள் திறக்கலாம்
பலரின் எண்ணங்களில்
எதிர்பார்ப்பு இழைகள்
பின்னத் தொடங்கின
பல்முனைத் தாக்குதல்களுக்கும்
மௌனமொழியால் உரக்கப் பேசி
நிராயுதபாணியாய்
மார்பு காட்டி நின்றவர்கள்
நம்பிக்கைத் தோணியைப் பற்றியவாறு
ஆயுதங்களை நம்பாமல்
மனங்களோடு பேசிப்பேசி
வியூகங்களை வகுக்க
பலரின் எண்ணங்களில்
எட்டிப்பார்க்கவேயில்லை
புயல் பற்றிய கவலைகள்
தேர்தலின் முடிவு எந்நேரத்திலும்
வந்துவிடும் என அறிவிப்பு வந்தது
காத்திருந்த
அந்த நெருப்பு நிமிடங்களில்தான்
அதுவரை பெயரறிந்து முகமறியாதவர்களோடு
கைகுலுக்கிக் கொள்ள முடிந்தது
எழுதிக்குவித்த விரல்களைப் பற்றி
அவற்றின் ஸ்பரிசம் உணர்ந்து
பழைய படைப்புகளின் மீது
பயணிக்க முடிந்தது
முதுமையெனும் முரடனிடம்
வண்ணம் இழந்தாலும்
நம்பிக்கையிழக்காத உள்ளங்களோடு
உறவாட முடிந்தது.
எழுதியெழுதி ஓய்ந்து கிடந்தவர்கள்
எழுந்து வந்திருந்தார்கள்
நீங்களா அவர்?
எனப் புருவ விளிம்புகள்
ஆங்காங்கே உயர்ந்தன
எதிர்பார்த்த தருணம் வந்தது
பதிந்துகொண்டவர்களைவிட
பதிவான மொத்த வாக்குகளில்
ஒன்று கூடுதலாக கணக்கில் வந்ததால்
யாரும் வெற்றிபெறவில்லை என்று
அறிவித்தார்கள்
Subscribe to:
Posts (Atom)