நம் குரல்

Thursday, October 2, 2014

கணக்கில் வராதவர்கள்





காற்றுக்கு அசையும் கொடிகள்
எழுந்து நிற்கும் தோரண வளைவுகள்
வெளிச்சம் உமிழும் விளக்குகள்
புதுச்சாயத்தில் பொலியும் கட்டடங்கள்
சீரமைக்கப்பட்ட சாலைகள்
வண்ண வண்ணப் பதாகைகளில்
புன்னகை சிந்தும் தலைவர்கள்
தோலின் நிறம்தான் வேறுபாடே அன்றி
ஒற்றுமையின் நிறம் ஒன்றென்று
கைகோர்க்கும் மனிதர்கள்
எழுச்சியூட்டும் முழக்கங்கள்
அணிவகுப்பில் கம்பீரம் காட்டும் முகங்கள்
வரிசைபிடித்துக் கையசைக்கும் சிறார்கள்
வியந்து ரசிக்கும் வெளிநாட்டினர்
இப்படியாக..
களைகட்டியிருந்தன கடைவீதிகள்
ஆரவாரத்தை அணிந்தவாறு
பூரிப்பைப் பகிர்ந்தவாறு

கொண்டாட்டம் முடிந்து எல்லாமும் எல்லாரும்
விடைபெற்றுப் போன பின்னர்
பழைய முகத்திற்குத் திரும்பும் கடைவீதிகள்
தமக்குப் பின்னால் மறைவாய்
எப்பொழுதும் பதுக்கி வைக்கின்றன
அணிவகுப்பில் பங்கேற்கத்
தகுதியில்லையெனச் சிலரை

தோல் நிறம் தெரியாதவாறு
உடலெங்கும் அழுக்கு நிறைய
கிழிந்த ஆடைகளை அணிந்தவாறு
மௌனம் கனத்த முகத்தோடு
போதையில் தன்னை மறந்தவாறு
உடைமையென ஏதும் இல்லாது
தவம்போலும் கையேந்தியவாறு
பின்வீதிகளில் உறைந்திருக்கிறார்கள் இவர்கள்

கூட்டிக் கழித்துப் பார்த்தால்
எல்லாம் சரியாக இருந்தாலும்
சரியில்லையென்றே மனம் சொல்கிறது
கணக்கில் விடுபட்டுப் போன இவர்கள்
கண்ணில் படும்போதெல்லாம்..



No comments:

Post a Comment