நம் குரல்

Tuesday, May 8, 2012

நாளிதழ் இல்லா வீடு





கனவுகளின் கரைதொட்டுக் கரைதொட்டு
நழுவிக்கொண்டிருக்கிறது அந்த வீடு

அதனுள் நுழைந்து வெளியேறும் காற்றில்
நிறைகின்றன அனுமானத் துகள்கள்

தன் உள்வெளியெங்கும்
நவீனத்தின் பூச்சுகளால்
அலங்கரித்துப் பார்த்துப் பூரிக்கிறது

நாளிதழ் இல்லா அந்த வீட்டில்
சன்னல்கள் இருந்ததில்லை

அங்கிருந்து கிளைவிடும் பாதைகள்
எங்கும் புறப்படாமல்
வாசலிலேயே தேங்கி விடுகின்றன

காலைப் பொழுதுகளில்
சோம்பலோடு  நெட்டி முறிக்கிறது
ஞாயிற்றுக்கிழமையில்
இன்னும் தாமதமாக

வரவேற்பறை நிலைப்பேழையில்
அலங்காரப் பொருள்களை நிறைத்து
வருவோரிடம் பகட்டு காட்டுகிறது

எப்போதாவது கசங்காத நாளிதழ்களை
வரவேற்பறையில்
வருவோர்க்கு வைத்திருக்கிறது

தனக்குள் நடமாடும்
மனிதர்களின் சொற்களைப் பறித்துக்கொண்டு
அவர்களை மௌனமாக்கிப் பார்க்கிறது

நடிகர்களைத் தனக்குள் பேசவிட்டு
அவர்களின் இரைச்சலையே
தனது மொழியாக்கிப் பேசுகிறது

பழைய நாளிதழ் வாங்கும் சீனன்
தன்னை மௌனமாய்க் கடக்கையில்
தன் இல்லாமை நினைந்து
மௌனமாய் விம்முகிறது

No comments:

Post a Comment