நம் குரல்

Thursday, December 8, 2011

புலம்பெயர்தலின் பேரின்பம்


குகை வாழ்க்கை சலித்து
ஆதிமனிதனின் கால்கள்
நதிக்கரை நோக்கிப் பயணித்தன

அரண்மனை வாழ்வை விடுத்து
விடைகளைத் தேடிப் புறப்பட்டார் சித்தார்த்தன்

ஹென்றி இளவரசரின் கட்டளை சுமந்து
பார்த்தலோமிய டயஸ், வாஸ்கோ டி காமா
புதிய பாதையில் பயணம் தொடங்கினர்

மக்காவின் உதாசீனங்களை உதறிவிட்டு
மதினாவில் வரவேற்கக் காத்திருக்கும்
கரங்களை நோக்கி விரைந்தார்
அண்ணல் நபி

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி
மண்ணுக்கு உரமாகாமல்
சேலத்திலிருந்து குடும்பத்தோடு
புறப்பட்டார் தாத்தா

புதிய வீடு வாங்க ஒப்பந்தம் செய்துவிட்டதாக
சிட்னியிலிருந்து மாமா கடிதம் அனுப்பினார்

அடுத்த மாதம் பாரிசில் நடக்கும்
தமிழ்ப்பண்பாட்டு நிகழ்வுக்கு வரும்படி
சிற்றப்பா மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்

கனடா தொரொந்தோ நகரில் வெளிவரும்
தமிழ் நாளிதழ்களை எனக்குத் தபாலில்
அனுப்பினார் அண்ணன்

கடைவாயில் வெற்றிலையை அதக்கிக்கொண்டே
பாட்டி சொன்னார்:
“நட்ட இடத்திலேயே நின்னா மரஞ்செடிக்கு அழகு
மனுசனுக்கு இல்லடா
கால்போன போக்குல போயித்தான் பாக்கணும்
கடிவாளம் கையில இருந்தா கவலையேன் படணும்”

No comments:

Post a Comment