நம் குரல்

Monday, December 5, 2011

பாறையின் இடுக்கில்



பாறையின் இடுக்கில்
தவறிய விதைகள்
நீர்குடித்துப் போராடி
முட்டி முளைப்பதுபோல்

உணவைத் தேடி உயரப் பறந்து
சோர்வுறும் சிறகு சுமந்து
கண்டங்கள் தாண்டும்
பறவைகள்போல்

பின்னிய வலைகள்
அறுந்து வீழ்ந்தும்
எச்சிலால் மீண்டும்
பின்னலைத் தொடரும்
சிலந்தியைப்போல்

கூட்டுப் புழுவாய்
சிறைக்குள் ஒடுங்கியும்
ஓட்டை உடைத்துப் பறக்கும்
பட்டாம்பூச்சிபோல்

நீரில்லாப் பாலையில்
கனல் கக்கும் வெம்மையில்
பொதிசுமந்து கடமையாற்றும்
ஒட்டகம்போல்

கைத்தடியால் தரைதடவி
கைப்பொருள் தனைவிற்று
தன்னுழைப்பால் நிமிரும்
கண்ணில்லா மனிதர்போல்

பொய்க்காலைப் பொருத்தி
பயிற்சியிலே தேர்ந்து
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்
காலில்லா மனிதர்போல்

விளக்கில்லா வீட்டில்
மெழுகுவர்த்தி எரியவிட்டு
நூல்களைப் புரட்டும்
பிடிவாத மாணவனைப்போல்

பனிக்காலம் முழுதும்
வெண்போர்வை போர்த்தி
பொய்யுறக்கம் பூண்டு
வசந்தத்தில் கண்விழிக்கும்
பூமரங்கள்போல்

உன்னைச் சுற்றியும்
வாய்ப்புகள் பறிபோகும்
பள்ளங்கள் தோன்றும்
இடர்கள் இடைமறிக்கும்
சொந்தங்கள் பகையாகும்
முயற்சிகள் முடமாகும்
வழிப்பாதை களவுபோகும்

அவற்றைப்போல்
அவர்களைப்போல்
நீயும் மீண்டு வருவாய்!
மீண்டும் வருவாய்!


2 comments:

  1. நல்ல தன்னூக்கக் கவிதை பச்சைபாலன். பொய்யுறக்கம்
    பூணும் பூமரங்கள் பற்றி எப்படித்தெரிந்துகொண்டீர்கள்?

    ReplyDelete
  2. என் அகப்பக்கத்தில் முகம் காட்டியதற்கு நன்றி சார்.
    கடுமையான பனிப்பொழிவில் காணாமல் போய்
    மீண்டும் வசந்தத்தில் கண்திறக்கும் மரங்களைத்
    தொலைக்காட்சியில் பார்த்ததுண்டு. அதைத்தான்
    கவிதையில் பதிவு செய்தேன். ஆமாம், அம்மாதிரியான பனிப்பொழிவில்
    பத்து நாட்களைக் கழித்தவராயிற்றே நீங்கள்!

    ReplyDelete