நம் குரல்

Friday, May 27, 2011

கடைசியாக எப்பொழுது அழுதீர்கள்?



‘அழுதுவிடு நீ அழுதுவிடு
அழுதே மனதை ஆறவிடு - நான்
அழுதவன் ஆதலால் அனுபவம் அதிகம்
அழுதுவிடு நீ அழுதுவிடு....’

தேர்வுத் தாளிலிருந்த அழுகை பற்றிய கவிதையில்
மாணவர்களோடு நீந்தத் தொடங்கினேன்

கடைவிழி அரும்பும் நீர்மணிகள்
அழுது சிவந்த கண்கள்
மகிழ்ச்சிப் பெருக்கில் பொங்கும் திவலைகள்
அழமாட்டேன் என கம்பீரம் காட்டும் கண்கள்
மனத்தில் விரிந்தன கண்ணின் காட்சிகள்

“கடைசியாக எப்பொழுது அழுதீர்கள்?”
கேள்வித் தூண்டிலை மாணவரிடம் வீசியெறிந்தேன்
வேடிக்கையாய் ஏதும் சிக்குமென
விடை மீன்களுக்குக் காத்திருந்தேன்

“சார், போன மாசம் எங்கப்பா திதிக்கு”
“ போன வாரம் பைலோஜி பேப்பருல பிழையா
செஞ்சுட்டேன்னு அழுதேன்”
“மூனு நாளக்கி முன்ன எனக்கும் தம்பிக்கும் சண்ட வந்தப்போ”
“தெரியல சார் எப்ப அழுதன்னு”
“ரெண்டாம் மாசம் எங்க மாமா எக்சிடண்ல இறந்தபோனப்ப சார்”
“என் கூட்டாளி மாலதி என்னோட பேசமாட்டேன்னு சொன்னப்போ”
“ஏன் சார்? நாங்க அழுத கதையெல்லாம் கேட்டு
கவிதை எழுதப்போறீங்களா?”
“சார் நீங்க எப்போ அழுதீங்க? அத சொல்லுங்க”

யாருமறியாமல் தனிமையில் நான் தேம்பித் தேம்பி
அழுத நினைவுகள் நனைக்கத் தொடங்கின

என் மீது பாய்ந்த கேள்வியை
உங்களிடம் திருப்பி அனுப்புகிறேன்

கடைசியாக எப்பொழுது அழுதீர்கள்?

எனது முதல் கவிதை



1978ஆம் ஆண்டில் நான் ஐந்தாம் படிவத்தில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் கவிதா தேவியோடு எனக்குக் காதல் அரும்பத் தொடங்கியது. அப்பொழுது வெளிவந்த வானம்பாடி வார இதழ் எனக்குள் துயில்கொண்டிருந்த கவிதை உணர்வுகளை எழுப்பிவிட்டது.

வானம்பாடி இதழின் பக்க அமைப்பும் படைப்புகளின் நேர்த்தியும் குறிப்பாக புதுக்கவிதைகளின் அணிவகுப்பும் என்னை அதன் தீவிர வாசகனாக்கிவிட்டது. ஒரு தீபாவளி பரபரப்பு நேரத்தில், இரவாங் ஸ்ரீகாரிங் இடைநிலைப்பள்ளியில் தேர்வு முடிந்து, அப்பாராவ் புத்தகக் கடையில் வானம்பாடி முதல் இதழை வாங்கிப் படித்துக்கொண்டே பேருந்தில் பயணப்பட்டது இன்னும் நினைவில் அழியாத காட்சியாய் அப்பிக் கிடக்கின்றது.

ஆதி.குமணன், இராஜகுமாரன், அக்கினி மற்றும் பல புதியவர்களின் கனமான படைப்புகள் வானம்பாடிக்கு மகுடங்களாகத் திகழ்ந்தன. என்னை அதிகம் ஈர்த்துகொண்டவை புதுக்கவிதைகள். சின்னச் சின்னச் சொற்சிலம்பங்களில், சொல் ஊர்வலங்களில் வாழ்க்கையின் மர்மங்களைத் திடீரென திரைவிலக்கிக் காட்டும் கனமான, ஆழமான புதுக்கவிதைகளைப் படிக்கப் படிக்க எழுதவேண்டும் எனும் வேட்கை எனக்குள் எட்டிப் பார்த்தது.

இரவாங்கை அடுத்துள்ள சுங்கை சோ தோட்டத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். என்னை ஒரு படைப்பாளனாக உருவாக்கியதில் பசுமை கொழித்துக் கிடந்த அந்தத் தோட்டத்திற்கும் கணிசமான பங்குண்டு. இயற்கை அழகு நிறைந்து வழிந்த என் பிறந்த மண்ணே எனக்குள் பசித்த புலன்களுக்கு விருந்து பரிமாறிக்கொண்டிருந்தது.

தோட்ட நுழைவாயிலில் அமைந்திருந்த இடுகாடு, இடுப்பொடிந்த செம்மண் சாலைகள், தீம்பாரில் வரிசை பிடித்து நேர்த்தியாய் நிற்கும் கித்தா மரங்கள், மஞ்சள் வெயில் பூசிய மாலைப்பொழுதுகள், தோட்டத்து முச்சந்தியில் கதைத்துத் திரியும் பெரிசுகள், பனிகொட்டும் திறந்த வெளியில் பார்த்த சினிமாப் படங்கள், பக்கத்து வீட்டுச் சின்னக்காளை கங்காணியின் ஒலிநாடாவில் கசிந்த பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களின் வசனங்கள், ஆடுகள் மேய்க்கும் பொழுதுகளில் எனக்குக் கிடைத்த தனிமை - இவை எல்லாமே என் உணர்வுகளில் கலந்து என்னைப் படைப்புலகத்திற்கு ஆற்றுப்படுத்தின.

அதோடு, இளைஞர்கள் முயற்சியால் தோட்டத்தில் அமைக்கப்பட்ட ‘கலைமகள் படிப்பகம்’ என் படிக்கும் ஆர்வத்திற்கு நீர் வார்த்துக்கொண்டிருந்தது. பழைய மாணவர் சங்கம் என்ற இயக்கத்தைத் தொடங்கி திருமணி, எல்லப்பன், பச்சையப்பன், பிச்சைமுத்து, ஆகியோரின் வழிகாட்டலில் தோட்டத்து இளைஞர்கள் கட்டுக்கோப்பாகச் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

முதலில், ஒரு பார்வையாளனாக இருந்து அவர்களின் பணிகளை வேடிக்கைப் பார்த்தேன். பின்னர், கலைமகள் படிப்பகச் செயலாளராகப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற வழிகளில் - ஒல்லும் வகையெலாம் செயலாற்றினேன்.

படிக்கும் பழக்கத்தோடு, சமுதாய உணர்வும் இதனால் என்னுள் நீக்கமற நிறைந்துபோனது. கலைமகள் படிப்பக ஆண்டறிக்கை, செயலறிக்கை இவற்றை முழுமையாக நானே தயாரித்தேன். என் எழுத்துப் பயிற்சிக்கு இவை நல்ல களமாயின.

முதலில் தமிழ் நேசன், தமிழ் மலர் ஞாயிறு மலர்களுக்கு ‘வாசகர் கடிதம்’ பகுதிக்கு எழுதத் தொடங்கினேன். நான் வசித்த தோட்ட லயத்தில் கடைசி வீட்டில் வசித்த நண்பன் செல்லையா என் எழுத்துலக ஆர்வத்திற்குத் துணையாக வந்தான். ஞாயிற்றுக்கிழமை நாளிதழ்களோடு அவன் வீட்டிற்குப் போய் விடுவேன். இருவரும் நாளிதழ்களைப் புரட்டுவோம். கதை, கட்டுரைகளை அலசுவோம். நான்கு வரிகளில் எதையாவது அவசரமாக எழுதி மறுநாள் அவசரமாகத் தபாலில் சேர்ப்போம். நாளிதழில் பெயர் வருவதைக் காண்பது ஒரு போதை வஸ்துபோல் இருவரையும் இழுக்கத் தொடங்கியது. இப்படியாக, நாளிதழ்களுக்கு எழுதும் ஆர்வம் வளரத்தொடங்கி பின்னர் சிறு சிறு கட்டுரைகளாக கிளைவிட்டது.

என் அண்ணன் ந. பச்சையப்பன் சிறுகதை எழுத்தாளராக இருந்ததும் என் எழுத்துலக ஈடுபாட்டுக்கு வழிகோலியது. அவரின் சிறுகதை, கட்டுரைகள் நாளிதழ்களில் வரும்போது ஒருமுறைக்குப் பலமுறை அவற்றைப் படித்து ரசிப்பேன். இதனால், எழுதவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் தீவிரமாகியது.

ஒரு நாள் அண்ணன் என்னை அழைத்தார். “வாசகர் கடிதம் மட்டும் எழுதினா எப்படி? வானம்பாடி படிக்கிறல்ல, கவிதையும் எழுதிப்பாரு” என்றார்.

அதுவரை, வானம்பாடிக் கவிதைகளைப் படித்து ரசிக்கும் வாசகனாக இருந்த நான், அண்ணன் சொன்னதற்காக எதையாவது எழுதியே தீருவது என்ற முடிவுக்கு வந்தேன்.

என்ன எழுதுவது? வாழ்க்கை அனுபவங்கள் அதிகம் வாய்க்காத காலக்கட்டம் அது. தமிழ் மொழியின் வசீகரங்களின் மடியில் கிடந்த எனக்குக் கருத்துலகம் கைக்கெட்டாத தூரத்தில் இருந்தது. தீவிரமாகச் சிந்தித்தேன். அடர்ந்த இரப்பர்க் காடுகளில் மங்கு துடைத்த என் அனுபவத்தையே பாடுபொருளாக்கினேன். வானம்பாடியில் அச்சு வாகனம் ஏறிவந்த அந்தப்படைப்பு இதோ:
மங்குகள்
அவள்
இளம் பட்டையை
மெல்லச் சீவ
கோட்டில் அரும்பி
பீலியில் வழிந்த
பருவக் கண்ணீரை
ஏற்றுக்கொண்டதால்
எங்களை நாங்களே
கறைபடுத்திக்கொண்ட
தியாகச் செம்மல்கள்
அவளின்
ஆறு கெலன்
வாளி நிரம்ப
நாங்கள்
நான்கு மணிநேரம்
தாய்மை பெற்றோம்

நான் எழுதிய படைப்பு சிறு மாற்றத்தோடு (இராஜகுமாரன் அல்லது அக்கினி கைபட்டு) இப்படி வெளிவந்தது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.

இன்று, நான் பிறந்து வளர்ந்த சுங்கை சோ தோட்டம் தன் பெயரை இழந்துவிட்டு ஒரு தாமான் பெயரைத் தாங்கி நிற்கிறது. கலைமகள் படிப்பகம் இடம்பெயர்ந்து பொலிவிழந்து கிடக்கிறது. தோட்டத்தின் இயற்கை அழகை மேம்பாட்டுத் திட்டங்கள் தின்றுச் செரித்துவிட்டன.

அண்ணன் உயிரோடு இருந்தவரை என் இயற்பெயரான ந. பாலகிருஷ்ணன் என்ற பெயரிலேயே எழுதி வந்தேன். அண்ணனின் மறைவுக்குப்பின் (1980) அவரின் பெயரின் முதல் பகுதியை என் பெயரின் முதல் பகுதியோடு (பச்சை + பாலன்) இணைத்தேன். இப்படித்தான் பாலகிருஷ்ணன் பச்சைபாலனாக மாறிப்போனேன். எழுத்துலகில் நிறைய சாதிக்க நினைத்தவரின் ஆசைகளை உணர்வுபூர்வமாக என் இதயம் ஏந்திக்கொண்டது.

என்னை எழுதச் சொல்லி உற்சாகமூட்டிய என் அண்ணன் இன்று உயிரோடு இல்லை. ஆனால், என் முதல் கவிதையும் என்னைப் படைப்பாளனாக உருவாக்கிய அந்தப் பழைய நினைவுகளும் இன்னும் பத்திரமாக, காலக்கரையான் அரித்துவிட முடியாத ஆழத்தில் அப்படியே இருக்கின்றன.

முதல் காதலோ முதல் முத்தமோ மறக்க முடியாதவை என்பார்கள். எனக்கு அது முதல் கவிதையாக இருக்கிறது.

www.thangameen.com

Sunday, May 15, 2011

நமக்கு ஒரு மலாய்மொழி நாளேடு மலருமா?



இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்காமல் ஏதோ தமிழ் நாளேடுகளுக்கு எதிரான கருத்தாகத் தவறாக இதனைப் புரிந்துகொள்ளவேண்டாம். இங்கே உணர்ச்சிக்கு இடந்தராமல் அறிவுபூர்வமாக, ஆழமாகச் சிந்திக்குமாறு அன்போடு விழைகிறேன்.

மலேசியா சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தியரின் நிலை மனநிறைவு தரும் வகையில் இல்லை. எல்லாத் துறைகளிலும் இன்னும் மற்ற இனங்களைவிட பின் தங்கியே உள்ளோம். அடையாளக் அட்டை, பிறப்புப் பத்திரம் போன்றவற்றிலும் கோட்டை விட்டுவிட்டு அதற்காக அரசாங்கத்திடம் மனுசெய்யும் அவல நிலை நீடிக்கிறது. விரைவில் பொதுத் தேர்தல் வரப்போவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. நமது தேவைகள், கல்வி, பொருளாதாரம், சமயம் போன்றவற்றில் நிலவும் மனக்குறைகள், சமுதாயம் எதிர்நோக்கும் சிக்கல்கள் இவை யாவும் அரசின் காதுகளுக்குச் சென்று சேருகிறதா?

நம் பிரச்சினைகளை நம் தமிழ் நாளேடுகளில் எழுதுகிறோம். விலாவாரியாக அலசுகிறோம். கணக்கில்லாமல் அறிக்கைகளை வெளியிடுகிறோம். இவற்றையெல்லாம் அரசு கவனித்து நடவடிக்கை எடுக்கும் என்று முழுமையாக நம்புகிறோம். ஆனால், இவை எந்த அளவுக்கு அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகிறது? 54 ஆண்டுகளாக நமக்குள்ளேயே பழங்கதை பேசிக் காலம் கடத்திய கதையாகத்தான் இதைக் கருத வேண்டியிருக்கிறது.

ஊடகத்துறையில் நமக்கும் அரசுக்கும் இடையே தொடர்புப்பாலமாக ஒன்று இல்லாத நிலைமைதான் இன்றுவரை நீடிக்கிறது. நம் பிரச்சினைகளை மற்ற மொழி ஏடுகளில் (மலாய், ஆங்கிலம்) எழுதுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நம் இனத்தின் மனக்குறைகள் நமக்குள்ளேயே விவாதிக்கப்பட்டு காலப்போக்கில் மறக்கப்படும் அவலம்தான் இன்றுவரை நீடிக்கிறது. மலாய்க்காரர்களுக்கு ‘உத்துசான் மலேசியா’, ‘பெரித்தா ஹரியான்’ நாளிதழ்கள் உள்ளன. சீனர்களுக்கு ‘ஸ்டார்’ ஆங்கில நாளிதழ் இருக்கிறது.

நம்மைப் பற்றி மலாய் ஏடுகளில் குறைகூறித் திட்டி எழுதினால் உடனே தவறாமல் மொழிபெயர்த்து மறுநாளே வெளியிட்டு நம்மவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். ஆனால், மலாய் ஏடுகளில் நம் தமிழ் நாளேடுகளில் வெளிவரும் செய்திகளின் மொழிபெயர்ப்பு வருகிறதா என எண்ணிப் பாருங்கள்.

நம் தலைவர்கள் நம் பிரச்சினைகளை அரசுக்குக் கொண்டு சென்று அவற்றுக்குத் தீர்வுகாண முயன்று வருவதை மறுக்க முடியாது. ஆனால், அது முழுமையான, உடனடி பலனைத் தரும் என்று எதிர்பார்க்க முடியுமா? நம் இனத்தின் உண்மையான மன உணர்வுகளை, கொத்தளிப்புகளை, அவசரத் தேவைகளை உடனே அரசின் காதுக்கு எட்டச் செய்ய முடியுமா? அமைச்சரவைக்குக் கொண்டு போக வேண்டுமானால் ஒரு வாரம்வரை காத்திருக்க வேண்டுமே!


நம் தலைவர்களில் தமிழ் தெரியாத தலைவர்கள் இப்பொழுது உருவாகி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வானொலிப் பேட்டியில் இளைஞர் தலைவர் ஒருவர், தமக்குத் தமிழ் தெரியாது என்றும் தம் மனைவி தமிழ் நாளிதழ்களைப் படித்துத் தமக்குச் சமுதாயச் செய்திகளைச் சொல்லி உதவுவதாகச் சொன்னார். இப்படி நம் நிலைமை மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத, தமிழைத் தெளிவாகப் பேசத்தெரியாத நம்மில் சில தலைவர்களை நம்பி இனி காலத்தைக் கடத்த முடியுமா? இவர்கள் சமுதாய உணர்வுகளை நன்றாகப் புரிந்துகொண்டு அரசுக்கு முறையாக, தெளிவாகச் சொல்லி உரிமைக்குப் போராடி வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

எனவேதான், 54 ஆண்டுகளில் நாம் செய்த தவற்றைத் திருத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நமக்கும் அரசுக்கும் சரியான தொடர்பினை ஏற்படுத்த நமக்குச் சொந்தமான ஒரு மலாய் நாளிதழையோ வார இதழையோ நாம் வெளியிட வேண்டும். அது நம் இனத்தின் உணர்வுகளை, குறைகளை, அரசுக்குப் புரியும் மொழியில் பேசவேண்டும். உடனடி செயல் நடவடிக்கைக்கு அது வழிகோலட்டும். நம் இனம் குறித்த மலாய் ஏடுகளில் வெளிவரும் எதிர்மறையான கருத்துகளுக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றும்.

‘இண்டர்லோக்’ மலாய் நாவல் பிரச்சினையில் என்ன நடந்தது? நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தப் பிரச்சினை எல்லா ஏடுகளிலும் சூடு பறந்தது. நாம் கண்டனம், போலீஸ் புகார், நாவல் எரிப்பு, சந்திப்புக் கூட்டம் என பல வழிகளில் நம் எதிர்ப்பைத் தெரிவித்தோம். எல்லாம் முறையாக அரசின் காதுக்குப் போனதா? கேள்விக்குறிதான். மலாய் ஏடுகளில் ‘இண்டர்லோக்’ பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு பிரச்சினைக்குப் போய்விட்டார்கள். நாமோ இன்னும் இது குறித்துத் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறோம்; விடாமுயற்சியோடு தொடர்ந்து அறிக்கைகளை வெளியிடுகிறோம்.

நம் தமிழ் நாளேடுகளில் பத்தி (columnist) எழுத்துகளை எங்காவது பார்க்க முடிகிறதா? நாளேட்டின் ஆசிரியர் கூறும் கருத்துகளும் கேள்வி பதில்களும் போதுமா? மற்ற மொழி நாளேடுகளில் ஒவ்வொரு நாளும் பலதுறை அறிஞர்கள் தம் கருத்துகளை முன் வைத்து எழுதுகிறார்கள். இலக்கியம், சமூகம், அரசியல், பொருளாதாரம், சமயம் என எத்தனையோ துறைகளில் அறிவுசார்ந்த சிறந்த சிந்தனைகளை முன் வைக்கிறார்கள். நம்மிடையேயும் பல்துறை அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான களம் தமிழ் ஊடகங்களில் இருக்கிறதா? தமிழ் நாளேடுகள் அத்தகைய பத்தி எழுத்துகளுக்கு வாய்ப்பு வழங்குகிறதா? நமக்கான ஒரு மலாய்மொழி நாளேட்டில் அவர்களில் சிந்தனைகள் அரங்கேறி அவை நமக்கும் அரசின் பார்வைக்கும் வைக்கப்பட்டால் அதன் விளைவு எப்படி அமையும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

இத்தனைக்கும் நம் சமூகத்தில் மலாய் மொழியில் புலமைபெற்ற கல்வியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் சிந்தனைகள் சமுதாய வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் பயன்படாமல் வீணாகிக்கொண்டிருக்கிறது. ஏதோ நாம் தமிழ் மட்டும் அறிந்த ஒரு சமூகமாகவும் மற்ற ஏடுகளில் ‘உங்கள் கடிதம்’ பகுதிக்கு மட்டும் எழுதி நம் மனக்குறைகளை எப்போதாவது முன்வைக்கும் இனமாகவும் இருக்கிறோம்.

நம் சமூகத்தில் ஐம்பது விழுக்காட்டினர் தேசியப் பள்ளிக்குத் தம் பிள்ளைகளை அனுப்புகின்றனர். சமூகத்தில் தமிழ் படிக்கத் தெரியாத ஒரு பகுதியினர் எதைப்படித்து நம் சமூகப் போக்கை, சிக்கல்களை அறிந்துகொள்வார்கள்? அவர்களுக்குச் சமுதாயச் சிந்தனையை ஊட்டி நம் இனத்தின் பக்கம் ஈர்த்து அரவணைப்பது எப்படி? இனத்தின் நீரோட்டத்தில் கலக்காமல் தனித்து நிற்கும் அவர்களை ஒரு மலாய் ஊடகத்தின் வாயிலாக இனமான உணர்வை ஊட்டி, பண்பாட்டின் சிறப்பை உணர்த்தி, நம்மோடு இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ‘இண்டர்லோக்’ தமிழில் எழுதினால் அவர்களால் படித்துப் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், அதையே மலாய்மொழியில் கவிதையாக, கட்டுரையாக அவர்களும் எழுதுவார்கள். மற்றவர் எழுதியதையும் படிப்பார்கள்.

எங்காவது வீடுடைப்பு, கோயில் தகர்ப்பு, சமூகச் சிக்கல் என்றால் நாம் தமிழ் நாளேடுகளில் செய்தியோடு தமிழ்மொழியோடு மலாய் மொழியில் எழுதப்பட்ட பதாதை அல்லது சுவரொட்டியை ஏந்திய முகங்களின் படங்களைப் பார்க்கலாம். ஏன் தமிழில் மட்டும் வாசகங்களை எழுதாமல் மலாய்மொழியிலும் எழுதுகிறோம். அப்படியாவது சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளுக்கு அல்லது அரசுக்கு தெரியட்டும்; புரியட்டும். அப்படியாவது சிக்கல் தீரட்டுமே என்ற நோக்கத்தில்தானே? அதே நோக்கத்தை விரிவாக்கி நமக்கான ஒரு மலாய்மொழி நாளேடாகக் கற்பனை செய்து பாருங்கள். பல சிக்கல்களை அரசின் காதுகளுக்கு நேரடியாக நாம் கொண்டுபோக முடியும்.

‘ஒரே மலேசியா’ கொள்கையை அரசு அமல்படுத்திப் பல்லின மக்களின் ஒற்றுமையை வலியுறுத்திப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஓர் இனம் மற்ற இனங்களின் பண்பாட்டை, சமயத்தைத் தெரிந்துகொண்டால்தானே உண்மையான ஒற்றுமை மலரும்? நம் இனத்தின் பண்பாடு, சமயம், இலக்கியம் பற்றி அறிந்து நம்மைப் புரிந்துகொள்ள மற்ற இனங்களுக்கு இங்கே வாய்ப்பு உள்ளதா? ஒரு மலாய் மொழி நாளேட்டை நாமே நடத்தினால் இதைச் சாத்தியமாக்கலாம்.

நாம் நம் மொழியில் உரக்கக் குரல் எழுப்புகிறோம். அரசுக்கு அது கேட்கிறது என உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம். அரசுக்குப் புரிகிற மொழியில் காதுக்குப் பக்கத்தில் போய்க் கத்திக் குரல் எழுப்பிப் பார்க்கலாம். இதற்குப் பிறகும் புரியவில்லை, தெரியவில்லை, ஏன் தெளிவாகச் சிக்கலைச் சொல்லவில்லை என்று சாக்குப்போக்குச் சொல்ல முடியாது அல்லவா?

நமக்குத் தமிழ் நாளேடு மிகவும் முக்கியம். அதை யாரும் மறுக்க முடியாது. அவற்றோடு நின்றுவிட்டால் நமக்குத்தான் பெருத்த நட்டம். பல உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நமக்குத் கூடுதல் பலமாக மலாய் நாளேடு அமையும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

நான் உறுதியாக நம்புகிறேன். நமக்கு மலாய் நாளிதழ் இருந்தால் முன்னைவிட இன்னும் தெளிவாக உடனே அரசின் பார்வைக்கு நம் சிக்கல்களைக் கொண்டுபோக முடியும். செய்வோமா? பூனைக்கு யார் மணி கட்டுவது?


Friday, May 6, 2011

பால்யத்தின் பக்கங்கள்


நினைவுகளின் நீரோடையில்
கால் நனைக்கிறேன்
திரும்ப முடியாத பாதைகளில்
எனைத் திரும்பத் திரும்ப
அழைத்துப் போகிறது

பாதை நெடுக
காய்ந்து உதிர்ந்த இலைகளினூடே
படபடத்து விரிகின்றன
என் பால்யத்தின் பக்கங்கள்

பக்கங்கள் தோறும் பதிந்துகிடக்கும்
பழைய முகங்கள் பழகிய குரல்கள்
எனக்குக் கண்ணாமூச்சி காட்டி
இதய ஓடைகளுக்குள் ஒளிகின்றன

இதயத்தில்
இருக்கைபோட்டு அமர்ந்து
கதைகள் பேசி
கனவுகள் வளர்த்தவர்கள்
எழுந்துபோய்விட்ட பிறகு
அந்த வெற்றிடம்
எதையும் இட்டு நிரப்ப முடியாமல்
வெறுமையாய் நீளுகிறது

வெறுமையை விலக்கிப் பார்த்தால்
கனவு விதை தின்று நிமிர்ந்த மரங்கள்
அடர்த்தியாகிப் பக்கங்களை
அழகு செய்கின்றன

அழகான பக்கங்களில்
இலைகளில் கலந்து சிரிக்கும் பூக்களாய்
எத்தனையோ சொல்ல மறந்த கதைகள்
கொஞ்சம்
சொல்ல முடியாத கதைகள்



வெல்லப்போவது யாரு?


நகரில் வீடுகள் தோறும் வளர்கின்றன
தின்று கொழுத்து
வாலாட்டித் திரியும்
தினவெடுத்த மிருகங்கள்

அந்நியர் யாரும் எதிர்ப்பட்டால்
சீற்றம் நிறைந்த உறுமலோடு
அனல் கக்கும் பார்வையோடு
கடைவாயில் எச்சில் ஒழுக
அவர் மீது பாய எத்தனிக்கின்றன

உரிமையாளரின் அதட்டலையும் மீறி
திமிறிக்கொண்டு நம்மை முறைக்கின்றன
ஒரு பிடி சதை கிடைக்குமா
ஏக்கப்பார்வை எட்டிப்பார்க்கிறது

எப்போதோ கேட்ட
வளர்த்தவனையே கடித்த நாய்கள் கதைகள்
பயவிதைகளை உள்ளே தூவியிருக்கின்றன

நானும் வளர்க்கிறேன்
ஒரு பொல்லாத மிருகத்தை
தனக்கான தீனியை
என்னை வற்புறுத்தித் தேடித்தின்று
என்னை மிஞ்சிக்
கொழுத்துக்கொண்டிருக்கிறது

இப்படி வளர்ந்து பெரிதாகும்
என்று அறிந்திருந்தால்
என்னையே வென்றுவிடும்
வீரியம் அதனுள் விளையுமென்றால்

கலகம் செய்து என்னையே
கலைத்துப் போடுமென்றால்
உயிரிரக்கம் இல்லாமல்
என்னையே கடிக்க முனையுமென்றால்

வாலாட்டி என்னை நாடியபோதே
விட்டு விலகியிருப்பேன்
எட்டி நடந்திருப்பேன்
அன்றி..
தெருமுனையில் எங்காவது விட்டிருப்பேன்

கொன்று தொலைக்க வேண்டும் இதனை
இன்று தீர்மானம் நிறைவேற்ற மட்டுமே
முடிகிறது என்னால்

அதைக்கொல்ல நானும்
எனைக்கொல்ல அதுவும்
தொடரும் போராட்டத்தில்
வெல்லப்போவது யாரு?


எல்லாம் இழந்தும்..


அரிதாய்க் கிடைத்த விடுப்பில்
அத்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன்
எப்போது போனாலும் அதே சிரிப்பு
இப்பொழுதெல்லாம் பொக்கை வாயோடு

என்னைப் பார்த்ததும் பாசம் நிறையும்
பார்வை நலம் விசாரித்தது
எழுபதாண்டு முதுமை ஆனமட்டும்
அவரை உருக்குலைத்திருந்தது

தோல்களின் சுருக்கம்
கூன்விழுந்த உடல்
வெளுத்துவிட்ட கேசம்
தடுமாறும் சொற்கள்
மங்கிய பார்வை
அந்திம காலத்தின் நெருக்கத்தில்
அத்தை இருந்தார்

அத்தையின் இழப்புகள் எத்தனை?
எண்ணிப் பார்த்தேன்
புற்றுநோய்க்கு மாமா
சாலை விபத்துக்கு மூத்தவன்
போலீஸ் தடுப்புக்காவலுக்கு இளையவன்

ஒவ்வொருவராக விடைபெற்றுப்போய்
தனித்து நின்றும்
சோகத்தின் சாயல் படியாத முகத்தைப்
கண்களுக்குள் படமெடுத்க்து வந்தேன்

திரும்பும் வழியில் பார்த்தேன்
எல்லாம் உதிர்ந்தும்
வெறும் கைகளைப் பரப்பி
அழகாய் நின்றது மரம்
அத்தையைப்போலவே

Sunday, May 1, 2011

யாரும் யாருடனாவது..


யாரும் யாருடனாவது
இருக்க வேண்டும் என்கிறீர்கள்

தனியாக இருப்பதைக்
தகுதிக் குறைவாகச் சொல்கிறீர்கள்

நான் அங்கே போய்விட்டதாக,
நான் இங்கேதான் இருப்பதாக
அவரவர் கணக்கில்
என்னைப் பதிந்துகொள்கிறீர்கள்

குழுவாகச் சேர்ந்து கல்லெறியும்
கூட்டத்தில் என் முகம் தேடுகிறீர்கள்

ஆள் சேர்ந்தால்தான் முன்மொழிந்து,
வழிமொழிந்து தீர்மானம் நிறைவேற்ற
வசதியென்கிறீர்கள்

என்னைச் சுற்றிக் கட்டப்பட்ட கயிறுகளை
எப்போதோ கழற்றிவிட்டேன் என்கிறேன்
நம்ப மறுக்கிறீர்கள்

என்னை இதுகாறும் புதைத்த
பொதுமையிலிருந்து மீட்டெடுத்துத்
தனிமையிடம் தந்துவிட்டேன் என்கிறேன்
கேலி பேசுகிறீர்கள்

கட்டற்ற காற்றோடு கைகுலுக்கி
திசைகளற்ற வெளிகளில் கைவீசி நடப்பதின்
இன்பத்தைச் சிலாகித்துப் பேசுகிறேன்

வெறுப்பை உமிழ்ந்தவாறு
என்னைக் கணக்கிலிருந்து கழித்துவிட்டு
யாருடனாவது சேர்ந்துகொள்ள
புறப்படுகிறீர்கள்

(தங்கமீன் இணைய இதழ், சிங்கப்பூர்)
www.thangameen publications (April issue)