நம் குரல்

Saturday, April 16, 2011

நடுப்பகல் நாய்கள்

வீடுகள்தோறும் காத்திருந்து
ஏக்கத்தோடு எதையும்
ஏறிட்டுப்பார்க்கும்

அதன் கண்களில்
அடர்ந்து நிறைந்து வழியும்
சொல்லமுடியாத அடர்ந்த சோகம்

காலை உண்ட உணவு கரைந்துபோக
பசியோடு வாசலைப்
பார்த்துக் காத்துக்கிடக்கின்றன

சோம்பலாகக் கழியும் பகற்பொழுதின்
தூக்கத்தின் மயக்கத்தில்
ஏதும் ஒலி கேட்டால்,
யாரும் முன்னே கடந்துசென்றால்
குரல் கொடுத்துத் தன்னிருப்பை
உறுதிசெய்கின்றன

கண்முன்னே
நாய் ஏதும் கடந்தால்
ஆசையாய்க் கவனிக்கின்றன

வாசல்களைத் தொட்டு வீட்டுக் கதவுவரை
வெயில் மெதுவாக ஊர்ந்து
உடல் மேல் படர்கையில்
அவை உக்கிரமடைகின்றன

வீட்டின் பாதுகாப்பு உண்டென்ற நினைப்பில்
அலுலக வேலைகளில் மூழ்கியிருக்கும்
அதன் முதலாளிகளின் நினைவில்
அவை எட்டிப்பார்ப்பதில்லை

அவற்றைப்போலவே
வீடுகளின் சன்னல்களின் வழியாய்
வருவோர் போவோரையெல்லாம்
வெளிப்பார்வையால் விசாரித்தவாறு
விரக்தியால் புன்னகைக்கிறார்கள்
நடுப்பகல் மனிதர்கள்


No comments:

Post a Comment