நம் குரல்

Friday, January 7, 2011

அல்வா காலம்


இது அல்வா காலம்
அங்கிங்கெனாதபடி எங்கும்
கணக்கு வழக்கில்லாமல்
அல்வா விநியோகிப்படுகிறது

பசியென்று யாரும்
வாயைத்திறந்தால் போதும்
இந்தா புசி என்று வாயில்
அல்வா திணிக்கப்படுகிறது

எல்லாருக்கும் அல்வா பிடிக்கும்
அதிலும்
நமக்கு அதிகம் பிடிக்கும் என்பதால்
அள்ளியள்ளிப் பரிமாறப்படுகிறது

அல்வா பரிமாறல் பற்றி
அறிவிப்பு வந்ததும்
அதைப் பெறுவதற்கான கூட்டம்
கூடிக்கொண்டே போகிறது

வயிற்றுக்கு உணவு இல்லார்க்கு
அல்வா ஈயப்படும் என்பதால்
பரவாயில்லை என்றே
பலருக்கும் படுகிறது

நாளைகளைப் பற்றி
பலருக்கும் கவலைகள் கிடையாது
சுடச் சுட அல்வா
உடனே கிடைத்தால்
போதுமேன்றே கூட்டம் புறப்படுகிறது

அல்வாவோடு வருவோர்க்குத் தெரியும்
வயிற்றுக்கும் இதயத்துக்கும்
தூரம் அதிகம் இல்லை என்பது

வயிறு நிறைந்தால்
இதயம் குளிரும்
இதயம் குளிர்ந்தால்
அல்வா அள்ளித் தந்த கைகளை
இதயம் கொண்டாடும் என்பது


பொய் சொல்லாமல் சொல்லுங்கள்
உங்கள் வீட்டுக்கு
அல்லது உங்கள் வீடமைப்புப் பகுதிக்கு/
தாமானுக்கு
அல்லது உங்கள் ஊருக்கு
அல்வா கிடைத்ததுதானே?

எத்தனை காலத்துக்கு
அல்வாவைத் தின்றே
நாம் காலத்தைக் கழிப்பது?
இனிப்பு நோய் வந்து
ஆயுளைக் குறைக்காதா?





No comments:

Post a Comment