நம் குரல்

Wednesday, December 22, 2010

சிந்திக்கிடக்கிறோம்



தெருவில் அவிழ்க்கப்பட்ட
நெல்லிக்கனி மூட்டையாய்
சிந்திக்கிடக்கிறோம்
சந்தி சிரிக்கிறது
நம்மில் இதனைச்
சிந்திப்பார் யாருமில்லையா?

ஓரணியில் நின்றபோது
உரக்கக் குரல் கொடுத்தோம்
அதிகாரத்தின் காதுகளில்
நாரசாரமாய் ஒலித்தது

இறுகிக் கிடந்த
தாழ்ப்பாள் நெகிழ்ந்தது
அவ்வப்போது அவசர உதவிகள்
எட்டிப் பார்த்தன

பசித்த வயிற்றுக்குக்
கொஞ்சம் உணவும்
பாராட்டு மடலும் கிடைத்தது

கைகோர்த்துக் களித்தோம்
திருவிழாவாய்த் திரண்டோம்
சின்னச் சின்ன இன்னலுக்கும்
காயங்களுக்கும்
கடைக்கண் பார்வை கிட்டியது

இன்றோ
உடைந்து கிடக்கிறோம்
எட்டாய்..
ஒன்பதாய்..

நாளை
இன்னும் உடைவோம்
நம்மைச் சில்லறையாய் மாற்ற
யார் யாரோ காத்திருக்கிறார்கள்

எழுதுகோல்கள் ஏடுகளில்
தாறுமாறாய் விளையாடின
இன்னும் உடைபடுவதற்கான
வியூகங்களை வகுத்தன

அறிக்கை மன்னர்கள்
எங்கெங்கும் முளைத்தார்கள்
ஏடுகளில் திருமுகம் காட்டித்
திட்டித் தீர்த்தார்கள்

கலகச் செய்திகள்
ஏடுகளில் கற்கண்டுச் செய்திகளாய்
இனிப்பு காட்டின

இனி,
கூவிக் கூவி
குரல் கொடுத்தாலும்
எந்தக் கொம்பனுக்காவது எட்டுமா
நம் சந்தைக் குரல்?

இரைச்சலில் இன்னும்
இழந்துகொண்டிருக்கிறோம்
நம் சுயத்தை

கட்டியிருந்த கயிறுகளைக்
கழற்றுவதாக நினைத்து
அணிந்திருந்த ஆடைகளை
அவிழ்த்த அநியாயத்தை
எங்குபோய் அறிவிப்பது?

மக்கள் சந்தையில்
நெல்லிக்காயாய் உருள்கிறோம்
கால்மிதியில் நசுங்காமல்
நம்மைக் காப்பதெப்படி?


No comments:

Post a Comment