நம் குரல்

Wednesday, December 22, 2010

காத்திருப்பு



ஏக்கத்தைச் சுவாசித்தபடி
வாசலில் என் காத்திருப்பு
நீளுகிறது நீண்ட காலமாய்

வண்டி வண்டியாய்
வந்து இறங்கி
எனைத் தாண்டி
வாசலைக் கடக்கும்
சொற்கள்..சொற்கள்..

வாசனைமிகும் சொற்கள்
வண்ணம்பூசிய அலங்காரச் சொற்கள்
போலி உணர்வில் பிசைந்த சொற்கள்
ஆரவார அணிவகுப்புச் சொற்கள்

அவற்றை அள்ளி முகர்ந்து
உள்ளே புதைந்திருக்கும்
மனித முகங்களைத் தேடுகிறேன்

சொற்களிடையே மங்கலாய்த்
தோன்றி மறையும் சில முகங்கள்
எனை நோக்கிப் புன்னகைக்கின்றன

கடந்துபோகும் சொற்களின்
உயிர்த்துடிப்பு கேட்க
காதுகளைக் கூர்மையாக்கிறேன்

மௌனத்தைப் பூசியபடி
வாசலில் வேகம்காட்டி மறைகின்றன
எனை ஏமாற்றியவாறு
சொற்கள்.. சொற்கள்

என் காத்திருப்பின்
நீளத்தை நீட்டியபடி..

No comments:

Post a Comment