நம் குரல்

Sunday, September 26, 2010

காப்பார் நகரில் தமிழ் இலக்கியப் பயிலரங்கு






மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் காப்பார் நகர் தொடர்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று 26.9.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை காப்பார் நகரில் அமைந்துள்ள ராசி அன்பு இல்லத்தில் தமிழ் இலக்கியப் பயிலரங்கு நடைபெற்றது. இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வை எதிர்நோக்கும் 27 மாணவர்கள் இதனில் பங்கு பெற்றனர். இப்பயிலரங்கை நான் வழி நடத்தினேன்.

இலக்கியக் குழுவின் தலைவர் திரு. சுப்ரமணியம், செயலாளர் திரு. இராமன், செயற்குழு உறுப்பினர் திரு. எம்.எஸ். பாலன் ஆகியோர் முன்னின்று சிறப்பாக ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.

நிகழ்வில் முதல் அங்கமாக, ராசி அன்பு இல்லத்தின் உரிமையாளர் திரு.பரமேஸ்வரன் (MCIS காப்புறுதி நிர்வாகி) மாணவர்களுக்குச் சிறப்பான தன் முனைப்பு உரையை வழங்கினார். காலை வேளையில் அவர்களைத் தட்டி எழுப்பி உற்சாகத்தையும் கல்வி மீதான நம்பிக்கையையும் ஊட்டிக் கலகலப்பை ஏற்படுத்தினார்.

மாதிரிக்கு: “பிறக்கும்போது தரித்திரத்தோடு பிறக்கலாம். ஆனால், வாழ்வைச் சரித்திரமாக மாற்றவேண்டும். ஆயிரம் பேர் வெற்றி பெற்றால் அதில் நான் ஒருவனும் இடம்பெறவேண்டும். ஒருவர் வெற்றி பெற்றால் அவன் நானாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டும். கமலஹாசன் மட்டுமா உலக நாயகன்? நீங்களும்தான். ஆயிரக்கணக்கான உயிர் அணுக்களோடு போட்டிப் போட்டு ஓர் உயிர் அணுதானே வெற்றிபெற்றது. அதுதானே நீங்கள்!”

நாவல், நாடகம், கவிதை ஆகிய பாடப்பகுதிகளையொட்டி விரிவாக விளக்கினேன். மாணவர்கள் ஆர்வமாய்க் கேட்டனர். கேட்கும் காதுகள் இருந்தால் சலிப்பில்லாமல் பேசலாம்.

காப்பார் நகரில் அயர்வில்லாமல் இலவசமாகத் தமிழ் இலக்கியப் பணியாற்றும் திரு.சுப்ரமணியம், திரு.இராமன் அவர்தம் குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள். நிறைவான பணி முடித்த உணர்வோடு விடைபெற்றேன்.




No comments:

Post a Comment