நம் குரல்

Tuesday, May 18, 2010

பிண ஊர்தியின் பின்னால்



தொடங்கிவிட்டது
பூக்களும் மாலைகளும் குவிந்த
திரும்ப முடியாத பயணம்

பின்னால் ஓங்கி ஒலித்த அழுகுரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து
மறைந்தன

நீள்துயிலில் ஆழ்ந்த மனிதனின்
பழைய காட்சிகளை மனத்திரையில்
ஓட்டிப்பார்க்கிறேன்

என்னோடு உடன்வரும்
உங்களின் வாயிலிருந்து
தத்துவ முத்துகள் உதிர்கின்றன

விடைபெற்றவனின்
வாழ்வதிகார நூலின் பக்கங்களைப்
பலர் அவசரமாகப் புரட்டி
விமர்சனங்களை முன் வைக்கிறீர்கள்
முடிந்துபோன கணக்கில்
இலாபம் நட்டம் பார்க்கிறீர்கள்

இவனோடு மறைந்துபோகும்
இரகசியங்கள் எத்தனை?
இறுதியாகச் சொல்ல நினைத்துச்
சொல்ல முடியாமற் போனது?
இனி இவனின் கைப்பேசி எண்ணை?

மின்சுடலையை அடைய
எஞ்சியுள்ள நேரத்தைச் சலிப்போடு
கணக்குப் பார்க்கிறோம்

நாம் உணராமலே
நமக்குப் பின்னால்
நமக்காக அலங்கரிக்கப்பட்ட வண்டியும்
வழியனுப்பும் கால்களும்..

1 comment:

  1. வணக்கம் ஐயா,

    இனி இவனின் கைப்பேசி எண்ணை?

    எனும் உணர்வைத் தொடும் வார்த்தைகள்,
    மிகமிக எதார்த்தமாய் நின்று,
    மீளாப்பிரிவை உணர்த்திய உறவுகளை, மீண்டும் கண்முன் கொணர்ந்தது.

    ReplyDelete