நம் குரல்

Thursday, March 18, 2010

எல்லாம்..


கோயில் உபயத்தில்
எல்லாம் இருந்தன

தேங்காய், வாழைப்பழம், சூடம், சாம்பிராணி
கும்பம், பூ, ஊதுபத்தி, திருநீறு, குங்குமம்,

மந்திரம் சொல்லும் ஐயர்
உபயத்தில் கலந்துகொள்ள உறவினர்கள்
வழக்கமாய் வரும் பக்தர்கள்

கும்பாபிஷேகம் கண்டு
பொலிவாய் வண்ணத்தில் காட்சிதரும்
திருக்கோயில்

அதற்கும் மேலாய்
நான் வழிபடும் திருமுருகன்

எல்லாம் இருந்தன
என் உயிர்த்தமிழைத் தவிர

2 comments:

  1. கோயில்கள் மட்டுமல்ல தமிழர்களின்
    இல்லங்களும் இப்படித்தான் இருக்கின்றன.

    எல்லாம் உள...

    அன்பு கணவன்
    ஆசை மகன்
    அளவான வசதி
    ஆடம்பரமற்ற வாழ்க்கை
    வள்ளுவன் காட்டிய இல்லறம்.

    "டியர்" - மனைவியைக் கணவன்
    "டார்லிங்" - கணவனை மனைவி
    "சாயாங்" - பிள்ளையைப் பெற்றோர்
    "மாம் அண்ட் டாட்" பெற்றோரைப் பிள்ளை

    எல்லாம் உள...

    விழியான மொழியால்
    விளிக்கவும் தயங்கும்
    எம் தமிழரிடமும்
    எல்லாம் உள.

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள்
    உங்கள் கருத்தே
    ஒரு கவிதையாக உள்ளது

    எனக்கு அண்மையில் நேர்ந்த
    அனுபவம் இது

    வழிபாட்டில் மனம்
    கலக்காத தருணங்கள் அவை

    இனத்தின் பெருமையைப் போலவே
    இப்படிச் சிறுமையும்
    சில உள்ளன

    காலணியோடு வெளியே
    தமிழையும் கழற்றிவிட்டு
    கோயிலுக்குள் நுழையும் கொடுமையை
    ஒப்புக்கொள்ள ஒருநாளும்
    என் மனம் ஒண்ணாது!

    உங்கள் கருத்துக்களைக்
    கவிதையாய்த்
    தந்தமைக்கு
    மிக்க நன்றி

    ReplyDelete