நம் குரல்

Saturday, July 9, 2022

 தான்ஸ்ரீ சுப்ரா -  சில நினைவுகள்



1986 ஆம் ஆண்டு. நான் எழுதிய மௌனம் கலைகிறேன் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்கும்படி டத்தோ சுப்ராவை அழைக்க  டாமான்சாராவில் அவர் அலுவலகம் சென்றேன். அப்பொழுது அவரின் உதவியாளராக இருந்த எழுத்தாளர் வீ. செல்வராஜ் டத்தோ சுப்ராவைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். அரசியல் பின்புலம் இல்லாத இளைஞனான என்னிடம்  மிகுந்த அன்போடும் மரியாதையோடும் உரையாடினார் டத்தோ சுப்ரா. நூல் வெளியீட்டுக்கு தலைமை தாங்க மகிழ்வோடு ஒப்புக்கொண்டார்.

நான் பிறந்து வளர்ந்த ரவாங் சுங்கைச் சோ தோட்டக் கோயில் மண்டபத்தில் நூல் வெளியீடு நடைபெற்றது. 

ம இ கா துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ சாமிவேலுவும் டத்தோ சுப்ராவும் மோதிக்கொண்ட காலகட்டத்தில் இருவரின் ஆதரவாளர்களால் தோட்டமே பிளவுப்பட்டுப் போனது. பள்ளி மாணவனாக  இரு தரப்பின் வாய்ச்சண்டைகளைப் பார்த்திருக்கிறேன். 

டத்தோ சுப்ரா தோட்டத்துக்கு வருகிறார் என்றதும் ஒரு பரபரப்புக் காய்ச்சல் தோட்டத்தில் பரவி விட்டது. தோட்ட நிர்வாகி என்னை அழைத்து தகவலை உறுதிப்படுத்தினார். அது மட்டுமா? டத்தோ சுப்ராவை வரவேற்க அவரே ஏற்பாடுகளைச் செய்தார். 





நூல் வெளியீட்டுக்குப் பெரும் திரளாக மக்கள் திரண்டார்கள். நாளிதழ் செய்தியைப் பார்த்து சுற்றுவட்டார தோட்ட மக்களும் கலந்து கொண்டார்கள்.

எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதி குமணனும் கலந்து சிறப்பிக்கச் சம்மதித்தார். ஆனால் வீட்டில் காலில் கண்ணாடி விழுந்து சிறுவிபத்து ஏற்பட்டதால் அவரின் பிரதிநிதியாக வானம்பாடி தியாகு கலந்து கொண்டார்.  

குத்துவிளக்கு ஏற்றி  நூலை வெளியிட்டு டத்தோ சுப்ரா  உரையாற்றினார். அந்த நூல் வெளியீட்டுக்குப் பிறகு அத்துணைப் பெரிய கூட்டத்தைத் திரட்டுவது எனக்கு எப்போதும் சாத்தியமாகவில்லை. நூல் வெளியீட்டின் ஞாபகங்கள் என் நினைவுப் பிடியில் இன்னும் இறுக்கமாக இருக்கின்றன.

மஇகாவில் தலைமை பதவியை அலங்கரிக்கும் வாய்ப்பு தான்ஸ்ரீ சுப்ராவுக்குக் கடைசிவரையில் கைகூடாமல் போனது. யாரையும் ஈர்க்கும் வசீகரம் , இனிமையாகப் பழகும் தன்மை, அதிர்ந்து பேசாத குணம்      தான்ஸ்ரீ சுப்ராவை மக்களின் தலைவராக மக்கள் மனங்களில் நிலைபெறச் செய்தன.



மரணம் எல்லாப் பெயர்களையும் அழித்து விடுகிறது. சிலரின் பெயர்களையே அடிக்கோடிடுகிறது. மலேசிய இந்தியர்களின் அரசியல் ஏட்டில் அழிக்க முடியாத பெயராக தான்ஸ்ரீ சுப்ராவின் பெயர் நிலைத்திருக்கும்.


Friday, July 1, 2022

 

புக்கிட்  ஜாலிலில் Tsutaya Books


ஜப்பானின் மிகப்பெரிய புத்தக வெளியீட்டு நிறுவனம், ஜூலை ஏழாம் தேதி கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் தனது கிளையைத் திறக்கிறது.  31,000 சதுர அடியில் 264 000 ஜப்பான், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.

அங்கு உள்ள கடையில்  சுவைபானம் அருந்திக்கொண்டே புத்தகங்களைக் கண்ணோட்டமிடும் வாய்ப்பு உண்டு.

இனி மின்னூல்தான். அச்சில் வரும் நூல்கள் காணாமல் போய்விடும் என்று பல கதைகளைக் கேட்டோம்.






அப்படியெல்லாம் இல்லை.
  அச்சில் வரும் நூல்களுக்கும் இன்னும் விற்பனை வாய்ப்பு உள்ளது என்பதை இஃது உறுதிப்படுத்துகிறது.

2030க்குள்  மலேசியாவில் இந்நிறுவனம் 55 கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

எல்லாம் சரி. அங்குத் தமிழ் நூல்கள் கிடைக்காதா என்று நாம் கேட்கலாம். மலேசியத் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம்  என்ற ஒன்றை அமைத்துக் கோரிக்கை வைத்தால் அதற்கு வாய்ப்பு அமையலாம். 


Sunday, June 26, 2022

 இதுபோல் வாய்க்குமா நாய்களுக்கு வாய்ப்பு?


பேச் என்ற பத்து வயது நாய்,  கணையம் பாதிக்கப்பட்டுக் கடந்த வியாழன் காலமானது. 

இரு முன்னம் கால்களும் அடிபட்டு மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட பேச்,  நாய் மீட்போர் இயக்கத்தால் தத்து எடுக்கப்பட்டுப் பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு 2  1/3  பகுதிக் கால்களுடன் மீண்டு வந்தது. 

வாடிய நாய்களைக் கண்டபோதெல்லாம் வாடும் நல் உள்ளங்களின் அன்பினால் 10 வருடம் நிறைவாக வாழ்ந்து முடித்துள்ளது பேச். அதனோடு கழித்த இனிய நினைவுகளை இன்று நாளிதழில் சிலர் பகிர்ந்துள்ளனர். 

அதன் நல்லடக்க சடங்கிற்கான அனைத்துச் செலவுகளையும் நிர்வாணா ஆசியா குழுமம்  ஏற்றுக்கொண்டுள்ளது. 

நாயை நாயாகப் பார்க்காமல் சக உயிரியாகப் பார்க்கும் உயர்ந்த உள்ளங்களைப் போற்றுவோம். 

 

எஸ்.பி.எம். தமிழ்மொழி

தேர்வுத் துணைவன்

எஸ்.பி.எம். தேர்வில் நம் மாணவர்கள் பலரின் சிறந்த தேர்ச்சிக்குத் தமிழும் தமிழ் இலக்கியமும்   முக்கியப் பாடங்களாய் அமைவதை மறுக்கவியலாது. இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில், தமிழ்மொழி பாடத்திற்குத் தயாராகும் மாணவர்களுக்கு  உதவும் நோக்கில் புதிய நூலாக எஸ்.பி.எம். தமிழ்மொழி (தாள் 2) – தேர்வுத் துணைவன் எனும் தேர்வு வழிகாட்டி  வெளிவந்துள்ளது. இதனை ஆசிரியர் ந.பச்சைபாலன் எழுதியுள்ளார். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் கற்பித்தலில் பல்லாண்டுகள் அனுபவமிக்க இவர் எழுதிய இரண்டு எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய நூல்கள் தற்பொழுது மாணவர்களுக்கு  வழிகாட்டும் நூல்களாகப் பயன்பாட்டில் உள்ளன.

எஸ்.பி.எம். தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தில் புதிய தேர்வுத்தாள் அமைப்புக்கு ஏற்ப, , தாள் 2இல் விடையளிக்கும் நுணுக்கங்களைக்  கற்றுத்தரும் நோக்கத்தில் இந்நூல் வெளிவருகிறது. கேள்வி வாரியாகத் தலைப்புகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் விளக்கமும் மாதிரிக் கேள்விகள் – விடைகள் ஆகியவற்றோடு பயிற்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக மாணவர்களின் சுயமுயற்சிக்கான பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. பெரும்பாலும் மாதிரித்தேர்வுத் தாள்கள் அடங்கிய பயிற்சி நூல்களைப் பெற்று விடையெழுதிய மாணவர்களுக்குக் கேள்வி வாரியான வழிகாட்டலும் பயிற்சியும் நிறைந்த பயனைத் தரும் என்பது உறுதி. ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் இஃது அமைந்துள்ளது.

தேர்வில் சிறந்த தேர்ச்சிக்கு விடாமுயற்சியும் தொடர்ப் பயிற்சியும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். மற்றத் தேர்வுப் பாடங்களில் எண்ணிறந்த பயிற்சி நூல்களும் மாதிரித் தேர்வுத் தாள்களும் உள்ளன. ஆனால், தமிழ்மொழி பயிலும் மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்புக்  குறைவு. அந்தக் குறைநீக்க இந்த நூல் நிச்சயம் உதவும். படிவம் 4 & 5 மாணவர்கள் இந்நூலை வாங்கிப் பயன் பெறலாம்.

 மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் நிறைய படங்களோடும் அழகிய வடிமைப்பிலும் 320 பக்கங்களில் குறைந்த விலையில் இந்நூல் உருவாகியுள்ளது. இந்நூலைப் பெற விழைவோர் 012 6025450 (.பச்சைபாலன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள்வழி  இந்நூலைப் பெறலாம்.

 

 

 

படிவம் 4 & 5 - தமிழ் இலக்கியம்

தேர்வுக் களம்


இடைநிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் இவ்வாண்டு முதல் (படிவம் 4)  அறிமுகமாகியுள்ளன. டாக்டர் மு.வரதராசனின் வாடா மலர்’, பாரதிதாசனின் பிசிராந்தையார் நாடகம், ‘கவிதைப் பொழில் (12 கவிதைகள்) ஆகியன அவையாகும். இவ்வாண்டு படிவம் நான்கில் பயிலும் மாணவர்களுக்கு  உதவும் நோக்கில் புதிய பாடநூல்களுக்கான வழிகாட்டி நூலாகத் தேர்வுக் களம் வெளிவந்துள்ளது.

இலக்கியம் கற்பதிலும் கற்பித்தலிலும் உள்ள சிரமத்தைக் கருத்திற்கொண்டு ஆசிரியருக்கும் மாணவருக்கும் உதவும் நோக்கில் இந்த இலக்கிய வழிகாட்டி நூல் தயாராகியுள்ளது. இந்நூலை இலக்கிய ஆசிரியர் .பச்சைபாலன் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என இலக்கியப் பரப்பில் தம் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் .பச்சைபாலன், எஸ்.பி.எம். மாணவர்களுக்காக ஏடுகளில் இலக்கியப் பாடத்திற்கான கட்டுரைகளைப் படைத்து வருகிறார். படிவம் 4 & 5 மாணவர்களுக்கு இணையம்வழி தமிழ்மொழி, இலக்கிய வகுப்புகளை நடத்தி வருகிறார்.

ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் கவிதை, நாடகம், நாவல் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் விரிவான விளக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. புதிய தேர்வுத்தாள் அமைப்பு பற்றிய விளக்கமும் உள்ளது. மேலும், நூறு பக்கங்களில் மாதிரிக் கேள்விகளும் அவற்றுக்கு முழுமையான விடைகளும் சுயமுயற்சிக்கான பயிற்சிகளும் உள்ளதால் அவை சிறந்த பயனைத் தரும்.

தேர்வுக்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் மாணவரையும் ஆசிரியரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. 2024வரை உள்ள புதிய இலக்கியப் பாட நூல்களையொட்டிய இந்த வழிகாட்டி நூலைத் தற்போது படிவம் இரண்டு முதல் நான்குவரை பயிலும் மாணவர்கள் பெற்றுப் பயன்பெறலாம்.

இந்நாட்டில்  அரை ஆண்டுகளுக்கும் மேலாக, படிவம் ஐந்தில் ஒரு தேர்வுப் பாடமாகத் தமிழ் இலக்கியம் இடம்பெற்று வருகிறது. தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் பயிலும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

 கடந்த ஆண்டு, தமிழ் இலக்கியத் தேர்வு எழுதிய மாணவர்கள் சிறந்த தேர்ச்சியை (94.1%) அடைந்துள்ளனர். அவர்களுள் 46.4%  மாணவர்கள் A+, A, A- தேர்ச்சி நிலையைப் பெற்றுள்ளனர். தமிழோடு தமிழ் இலக்கியமும் சிறந்த தேர்ச்சிக்குத் துணைபுரியும் என்பதால் தமிழ் மாணவர்கள் இலக்கியமும் பயில்வதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும்.

 352 பக்கங்களில் அழகிய வடிவமைப்பில், வெளிவந்துள்ள இந்நூலைப் பெற விழைவோர் 0126025450 (.பச்சைபாலன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 


திரை விமர்சனம்

 

மலேசியத் திரைப்படம்

மூன்றாம் அதிகாரம்




மறவன், ஆசான் ஆகிய திரைப்படங்களையும் அசுர வேட்டை, இறைவி திருமகள் காடு ஆகிய தொடர் நாடகங்களையும் வழங்கிய எஸ்.டி. புவனேந்திரன் இயக்கத்தில் புதிய திரைப்படம் மூன்றாம் அதிகாரம் ஜூன் 23ஆம் முதல் மலேசியத் திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளது

தமிழகத்தில் திரைப்பட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட இவரின் படைப்புகளில் தனித்தன்மைகளைக் காணமுடியும். நடிப்பு, இசை, பாடல்கள்திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி  அனைவரையும் ஈர்க்கும் படமாக  உருவாக்குவதில் கடும் உழைப்பைத்  தருபவர் எஸ்டி புவனேந்திரன். அந்த எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் வகையில் மலேசிய ரசிகர்களின் மனங்களை ஆட்சி செய்ய மூன்றாம் அதிகாரத்தோடு வந்துள்ளார் எஸ்டி புவனேந்திரன்.

 இளம்பெண் ஒருவர் காணாமல் போகிறார். அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர். அவர்களின் சந்தேக வளையத்துக்குள் வந்து போகும் பலரைச் சுற்றிக் கதை நகர்கிறது. தடயவியல் நிபுணர் ஒருவரின் வருகையும் அவரின் செயல்பாடும் கதையை வேறு திசையில் நகர்த்துகிறது.  படத்தின் தொடக்கத்தில் பற்றிக்கொள்ளும் பரபரப்பு கடைசிக் காட்சிவரை நீடித்து நம்மைப் படத்தோடு ஒன்றிவிடச் செய்கிறது.

 படத்தில் ஒவ்வொருவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். ஹரிதாஸ், ஜிப்ராயில், கே.எஸ்.மணியம், கவிதா தியாகராஜன், சுரீதா, சரேஸ், ஹம்சினி, குபேன் என நடிகர்கள் தேர்வும் அவர்களின் நடிப்பும் படத்தின் வெற்றிக்குப் பங்காற்றியுள்ளன. குறிப்பாக, ஹரிதாஸ், ஜிப்ராயில் ஆகிய இருவரும் தங்கள் அசாத்திய நடிப்பால் ஈர்க்கின்றனர்.

கதைக்களத்திற்கு ஏற்ப பாலன்ராஜ், ஜெகதீஸ் ஆகியோரின் விறுவிறுப்பான பின்னணி இசையும் காதுக்கினிய பாடல்களும் கவர்கின்றன. திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு ஆகிய ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தியுள்ளார்  இயக்குநர் எஸ்டி. புவனேந்திரன்.



படத்தில் கதைக்கு ஏற்ற அறிவியல் சார்ந்த தரவுகளை நன்கு ஆராய்ந்து இணைத்து நம்பகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளனர். திகில், மர்மம், காதல், சோகம், நகைச்சுவை எனச் சுற்றிச் சுழலும் கதையில் இழையோடும் அப்பா – மகள் பாசம் நம் மனத்தை நெகிழ வைக்கிறது. தகவல் ஊடகங்களில் கசியும் நம் தனிப்பட்ட தரவுகளால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்களே ஊகிக்கும்படி அமைத்திருப்பதால் படம் முடிந்தும் ரசிகர்களுக்கு அது பேசுபொருளாக இருப்பதை மறுக்க முடியாது. போலீஸ் துப்புத் துலக்கும் விதமும் அதற்குச் சவால் விடும் வில்லன்களின் வியூகமும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

படத்தைப் பார்த்து முடிக்கும்பொழுது   வாழை இலையில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவை ருசித்துச் சாப்பிட்ட உணர்வே மேலோங்குகிறது. அந்த அளவுக்கு மலேசிய ரசிகர்களின் உணர்வுக்கும் சிந்தனைக்கும் முழுமையான விருந்து பரிமாறியுள்ளார் இயக்குநர் எஸ்டி.புவனேந்திரன்.

 ஆசான்மறவன் திரைப்படங்களைப் போலவே மூன்றாம் அதிகாரமும் வெற்றிப்படப் பட்டியலில் இணைகிறது. அனைவரும் திரையரங்குகளில் குடும்பத்துடன் காண வேண்டிய படம் இது.

 

Saturday, February 8, 2020

ஹைக்கூ நேர்காணல்

புரியா மனங்களுக்குப் புலப்படாது ஹைக்கூ நேர்காணல் – வாணிஜெயம்

தமிழில் புதுக்கவிதைக்குப் பிறகு கவனத்தை ஈர்த்த கவிதை வடிவம் ஹைக்கூ. நவீனம் நோக்கிக் கவிதை நகர்ந்துவிட்டாலும் இயற்கைக்கு மீளல், எளிய உயிர்க்கு இரங்கல் என மனிதர்களின் அடிப்படைக்கூறுகளை நோக்கிக் கவனப்படுத்துகிறது  ஹைக்கூ. இன்று உலகின் பல மொழிகளில் ஹைக்கூ எழுதப்படுகிறது. இது ஜப்பானிய கவிதை வடிவமாக இருந்தாலும் அதன் பண்புகள், நாடு, மொழி எனும் எல்லைகளைக் கடந்து பல நாட்டுக் கவிதையுலகில்  சிறப்பிடம் பெற்றுள்ளன. மலேசியாவில் ஹைக்கூ கவிதையில் ஈடுபாடு காட்டிவரும் ந.பச்சைபாலன் ஹைக்கூ பற்றிய தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.






கேள்வி: ஹைக்கூ கவிதையின் தோற்றம் பற்றி விளக்குங்கள்.

பதில்:  ஹைக்கூ கவிதை, ஜப்பானில் 16ஆம் நூற்றாண்டில் அரும்பி, 17ஆம் நூற்றாண்டில் மலர்ந்து, மணந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்த மூன்று வரிகளில் அமைந்த எளிய கவிதை வடிவம். கீழ்த்திசைப் பௌத்தச் சிந்தனையில் முகிழ்த்துச் சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து மணம் வீசுவது ஹைக்கூ என்று தீ.லீலாவதி குறிப்பிடுகிறார். ரென்கா என்பது ஜப்பானியக் கவிதைகளில் ஒரு வகைப் பழம் பாட்டு ஆகும். அந்தக் குறும்பாட்டிலிருந்து மேலும் இறுகியும் குறுகியும் உருவான வடிவம்தான் ஹைக்கூ. தொடக்கத்தில் புத்த பிக்குகள் ஹைக்கூ கவிதைகள் எழுதினர். ஆனால், 17ஆம் நூற்றாண்டில்  தொக்குகாவா எனும்  நிலையான மைய அரசு உருவானதும் இலக்கிய உலகம் மறுமலர்ச்ச்சி அடைந்தது. ஹைக்கூ மக்கள் இலக்கியமானது.  20ஆம் நூற்றாண்டில்  அது உலகெங்கும் பரவி பல மொழிகளில் இன்று எழுதப்படுகிறது. ஜப்பானிய ஹைக்கூ கவிதை உலகில் நால்வராக பாஷோ, பூஷன், இஸா, ஷிகி ஆகியோர் போற்றப்படுகின்றனர்.

கேள்வி: ஹைக்கூ கவிதை தமிழுக்கு எப்படி வந்தது?

பதில்:  ஹைக்கூவைத் தமிழில் அறிமுகப்படுத்தியவரே மகாகவி பாரதியார்தான். 16.10.1916இல் சுதேசமித்திரன் இதழில், ஹைக்கூ பற்றிய கட்டுரையோடு மொழிபெயர்த்த ஹைக்கூ கவிதைகளையும் வெளியிட்டுள்ளார். உயோநே நோகுச்சி என்னும் ஜப்பானியக் கவிஞர் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த மார்டன் ரிவியூ எனும் இதழில் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு பாரதி கட்டுரை எழுதினார். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’ என்ற தமது கொள்கையை இதன்வழி பாரதியார் மெய்ப்பித்துள்ளார். தமிழுக்குப் புதுக்கவிதை, சிறுகதை போன்ற புதிய இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்திய பாரதியார்தான் ஹைக்கூவையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.  பின்னர், தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதி தமிழுலகம் அறியச் செய்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

கேள்வி : பாரதியார் மொழி பெயர்த்த ஹைக்கூ கவிதையைக் குறிப்பிட முடியுமா?

பதில் : ஹொகூஷி என்ற மாணவரின் வீடு தீயில் எரிந்துவிட்டது. அந்தச் செய்தியைத் தன் குருவுக்குப் பின்வருமாறு எழுதியனுப்புகிறார்:


                                              தீப்பட்டெரிந்து
                                                வீழுமலரின்
                                              அமைதியென்னே!

மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும்போது எத்துணை அமைதியுடன் இருக்கிறதோ, அத்துணை அமைதியுடன் ஞானி தனக்கு வரும் துன்பங்களை நோக்குகின்றான். வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால், அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லை என்று பாரதியே கவிதைக்கு விளக்கமும் தந்துள்ளார்.

கேள்வி: ஹைக்கூ கவிதையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?

பதில்1990ஆம் ஆண்டில்தான் ஹைக்கூ கவிதையின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. கவிக்கோ அப்துல் ரகுமான் மொழிபெயர்த்த சில ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வாசித்தேன். அவற்றின் இறுக்கம், சொற்களின் சுருக்கம், அர்த்தத்தின் பெருக்கம் என்னை ஒரு கவிதானுபவத்தில் மூழ்க வைத்தது. அவற்றில் ஒன்று. சொந்தக் கிணறு இருந்தும் அதில் நீர் எடுக்காமல் அண்டை வீட்டில் போய் நின்றுகொண்டு ஒருத்தி இப்படிக் குரல் கொடுக்கிறாள்.

                            யாராவது எனக்கு நீர் கொடுங்களேன் 
                            என் கிணற்றைப் பிடித்துக்கொண்டது
                            பூத்த இளங்கொடி
-       சியோனி

முல்லைக் கொடிக்குத் தன் தேரையே தந்து  மகிழ்ந்தான் பாரி வள்ளல். இவளோ, கிணற்றில் படர்ந்துள்ள பூப்பூத்த கொடியைப் பிடுங்கி எறிய மனமின்றித் தன் கிணற்றையே தந்து விடுகிறாள். மூன்று வரிகளுக்குள் மறைந்திருந்து கண்சிமிட்டும் நுட்பமான உணர்வுகளை உங்களால் உணர முடிகிறதா? கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ் சிறிய மூன்று அடிகளால் அமைந்து நமக்குள் ஆச்சரியங்களை அள்ளி இறைக்கும் ஹைக்கூ கவிதையைப் படித்தபோது இந்தப் பழமொழிதான் நெஞ்சில் இனித்தது.  அதன் பின்னரே, ஹைக்கூ கவிதைகளைத் தேடிப் படித்தேன்.  புதிய அனுபவத்தில் திளைத்தேன். சென்னையில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் ஹைக்கூவை எனக்கு அறிமுகப்படுத்திய கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் ஹைக்கூ பற்றிக் கட்டுரை படைத்த தருணம் மறக்க முடியாதது.

கேள்வி: ஹைக்கூ கவிதையின் இலக்கணம் அல்லது அதன் தன்மைகள் யாவை?

பதில்: ஹைக்கூவுக்கு இலக்கணம் உண்டு. அவற்றை நன்கு புரிந்து கொண்டால்தான் ஹைக்கூ கவிதைகள் எழுத முடியும்.

ஹைக்கூவின் இலக்கணம் 

1.  5 - 7 - 5 என்ற அசை அமைப்பை உடைய மூன்று அடிகளால் ஆன கவிதை வடிவம்.    
     (17 அசைகள் எனும் அமைப்பு தமிழில் தவிர்க்கப்பட்டு மூன்று வரிகள் மட்டும் ஏற்கப்படுகிறது)

2. ஹைக்கூ பெரும்பாலும் பருவங்களின் மாற்றங்களை, அந்த மாற்றங்கள் மனித மனத்தில்   
    ஏற்படுத்தும் பாதிப்புக்களைச் சித்தரிக்கும்.

3. ஹைக்கூவின் முக்கியமான பண்பு அதன் ஜென் தத்துவப் பார்வை. அதன் அடிப்படையை
    ஓரளவிற்காவது புரிந்துகொண்டால்தான் ஹைக்கூவின் ஆழங்களை அடையாளம் காண 
    முடியும்.

4. ஹைக்கூ கவிஞன் வாசகனையும் தன்னைப் போலவே பக்குவம் உடையவனாக மதிக்கிறான்.
    அவனையும் கவிதையின் உணர்வு அனுபவத்தில் பங்கு கொள்ளச் செய்கிறான்.

5. ஹைக்கூவின் மொழியமைப்பு தந்தியைப் போன்றது. வேண்டாத சொற்களை மட்டுமல்ல.      
    வாக்கிய அமைப்புக்கு வேண்டிய இணைப்புச் சொற்களைக் கூட அது விலக்கி விடுகிறது

6. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் அதன் ஈற்றடியில்தான் இருக்கிறது. அது ஒரு திடீர்
    வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையயும் வெளிச்சப்படுத்தும்.

7. ஹைக்கூ ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச்சொற்களையே
    பயன்படுத்தும்.

8. ஹைக்கூ கவிதைக்குத் தலைப்புத்  தேவையில்லை. தலைப்பு இல்லாமலே      
    காட்சியளிப்பதுதான் ஹைக்கூவின் தனிப்பண்பு    

9. ஹைக்கூவில் உவமை, உருவகம் போன்ற அணிகள் இல்லை. ஹைக்கூவின் சிக்கனப் பண்புக்கு ஊறு விளைவிப்பதாலும் எதையும் மிகையில்லாமல் உள்ளபடியே வெளியிட வேண்டும் என்பதாலும் அது அனுமதிக்கப்படுவதில்லை. அப்பட்டமான உணர்வு வெளிப்பாடும் ஹைக்கூவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.       





கேள்வி:   ஜென் தத்துவப் பார்வையைப் பற்றி விளக்குங்கள்.    

பதில்:   எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்க்கும் மனநிலைதான் இது.   இந்த உலகின் ஒவ்வொரு படைப்பும் எல்லையற்ற வாழ்க்கை எனும் மாக்கடலில் எழுந்து மறையும் அலைகள்; சத்தியத்தின் முகச்சாயல் காட்டும் வெளிப்பாடுகள்; சிகரமோ, உயர்ந்த மலையோ,  சின்னஞ் சிறிய பூவோ – எதுவாகினும் அகண்டத்தின் அங்கங்கள்; ஒரே வயிற்றின் உடன்பிறப்புகள்.   இந்த ஜென் தத்துவப் பார்வையோடு ஜப்பானியக் கவிஞர்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். அதனால் ஓர் எளிய காட்சி, ஒரு சாதாரண நிகழ்ச்சிகூட வாழ்க்கையின் மர்மத்தை உணர்த்தும் குறிப்பாகி விடுகிறது என்கிறார் அப்துல் ரகுமான்.   

                                                உறங்கவேயில்லை
                                                நிலத்தை விற்ற அந்த இரவில்
                                                தவளைகளின் அழைப்பு
                                                                       
ஜப்பானியக் கவிஞர் ஹொகுஷியின் ஹைக்கூ வரிகள் இவை. வறுமையைப் போக்க வேறுவழியில்லாமல் தன் வயலை விற்றுவிடுகிறார். தன் சொத்தை இழந்ததுகூட அவருக்கு வருத்தமில்லை. தான் வாழ்ந்து பழகிய இயற்கைச் சூழலைப் பறிகொடுத்ததுதான் அவரை வதைக்கிறது. அதனால்தான் தொலைதூர தவளைகளின் ஒலி  அவரின் தூக்கத்தைத் துண்டிக்கிறது.

மனிதன் மற்ற எல்லா உயிர்களைவிட தன்னை உயர்ந்த படைப்பாகக் கருதுகிறான் ஆனால், ஹைக்கூவின் உயிர்நாதமாக இருக்கும் ஜென் புத்தமதத் தத்துவப்பார்வை மனிதனின் இந்தப் பிரமையை உடைத்துப் போடுகிறது. அவன் கண்களை மூடியிருக்கும் மாயத் திரையை விலக்கி விடுகிறது. சின்னஞ் சிறிய பூச்சியோ, புழுவோ, எறும்போ, மனிதனோ அனைத்தையும் ஒரே தாயின் வயிற்றுப் பிள்ளைகளாக அது பார்க்கிறது. அவற்றில் உயர்வில்லை; தாழ்வில்லை. சீறியெழும் கடலில் மறைவதுபோல் ஒவ்வொரு படைப்பும் நிலையில்லாதவை என நினைவுறுத்துகிறது.

மனிதன் ‘தான் உயர்ந்த படைப்பு’ என்ற மனநிலையிலிருந்து கீழே இறங்கி வந்து மற்ற எளிய உயிரினங்களைச் சக உயிராகக் காணுகையில் அவற்றின் சின்னச் சின்ன அசைவுகள், செயல்பாடுகள் கண்களுக்குப் பூதாகரமாகத் தெரிகின்றன. இதனால்தான் ஹைக்கூக்களில் எறும்பு, நத்தை, வண்ணத்துப்பூச்சி, தவளை போன்றவை தனியிடத்தைப் பெறுகின்றன. ஜென் சிந்தனை இன்னும் ஆழமானது. அதன் சிறு துளியே இங்குச் சுட்டப்படுகிறது.


கேள்வி: குறைந்த சொற்களில் எழுதும்போது ஹைக்கூ கவிதை முழுமையற்ற படைப்பாகத் தோன்றுகிறதே?

பதில்: ஹைக்கூ கவிதைகள் முழுமையானதாகவோ தெளிவான கருத்துச் செறிவிடனோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குறைந்த சொற்களில் கவிஞன் தருவதை ஒருங்கிணைத்துப் பார்த்துப் பொருள் கொள்வது வாசகனின் வேலை. ஒரு பாதியைக் கவிஞன் தர மறுபாதியை வாசகன் உணர முழுமையான அனுபவம் கிடைக்கிறது. ஹைக்கூ என்பது பாதி திறந்திருக்கும் கதவு. முழுமையான அனுபவத்தைப் பெற வாசகன்தான் முயல வேண்டும். எல்லாவற்றையும்  சொல்லிவிடாமல் வாசகனுக்கும் மீதம் வைக்கிறான் கவிஞன். ஒவ்வொரு கவிதையிலும் வாசகனும் கூட்டுப் படைப்பாளியாகிறான். கவிஞன் இறங்கிக்கொள்ள வாசகன் அதன் மீது பயணம் போவான் என்கிறார் மேனாட்டறிஞர் ரேமாண்ட் ரோஸ்லிப். ஹைக்கூ, வாசகனின் அறிவு, அனுபவம் சிந்தனை ஆகியவற்றிற்கேற்பப் பொருள் தரும் தன்மையுடையது. எ.கா.

சிள்வண்டு பிடிக்கும் கம்பு
அழைக்கும் அலைகளினால்
கைவிடப்பட்டு தனியே...

கடற்கரையோரம் சிள்வண்டு பிடிக்க வந்தவர், அழகிய அலைகள் கவர்ந்திழுக்க வந்த செயல் மறந்து கால் நனைக்கச் சென்ற காட்சியை ஹெகிகாடோவின் இச்சிறிய கவிதை நயமாய்க் காட்டுகிறது.  இயற்கை அழகில் இதயம் இழப்பவரின் மனநிலை இதில்  வெளிப்படுகிறது.
                            
கேள்வி: ஹைக்கூ கவிதையில் இயற்கைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

பதில்:  ஜப்பானியர்களின் வாழ்க்கை இயற்கையோடு இரண்டறக் கலந்தது. இயற்கையே அவர்களின் வாழ்வை நிர்ணயிக்கின்றது. வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் என மாறி மாறிவரும் நால்வகைப் பருவங்கள் ஜப்பானியரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இங்கே மலேசியாவில் நால்வகைப்பருவ மாற்றங்களை நாம் அதிகமாக உணர்வதில்லை. ஆனால், அங்கே இந்த மாற்றங்கள் மனத்தில் பாதிப்புகளை விதைக்க அவை இலக்கியங்களில் பதிவு செயப்படுகின்றன.

இயற்கையோடு இத்தகைய நெருங்கிய தொடர்பு ஹைக்கூ கவிதைகளிலும் வெளிப்படுகிறது. என்ன இந்த ஹைக்கூ கவிஞர்கள்? நிலவையும் மரஞ்செடிகளையும் புல்லையும் பூவையும் பாடுகிறார்களே என யோசிப்பவர்களுக்கு இந்த விளக்கம் உதவும் என நம்புகிறேன். இயற்கையை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கும் மனிதனை மீட்டுக் கொண்டுவரும் முயற்சிதான் ஹைக்கூ.

                                                இலையுதிர்காலப் பௌர்ணமி
                                                ஒவ்வொரு புல்லின் நிழலிலும்
                                                பூச்சியின் ஓசை
                                                                        -பூசன்



                                                        அப்துல் ரகுமான்

இரவு நேரம். கண்களுக்கு எதுவும் புலப்படாத சூழல். புல்லின் நிழலில் பூச்சி இருப்பதையும் காண முடியாத நிலை. ஆனால், பூசன் ஓசை வழியே பூச்சி இருப்பதை உணர்கிறார். இரவு நேரத்தில் துல்லியமாய் ஒலி, ஒளி, நிழல், இருட்டு என அனைத்தையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கும் கவிஞரின் உள்ளம் இதன்வழி புலனாகின்றது.


கடைப் புத்தகங்கள்
கனமான பொருள்
இளவேனில் காற்று
                           -கிடோ

இளவேனில் காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கடையில் புத்தகங்கள் மேல் கனமான பொருள் வைக்கப்பட்டிருக்கிறது. அது காற்றின் வருகையை நமக்கு உணர்த்தும் பொருளாகிறது. நம்மைச் சுற்றி இயற்கையின் வருகையும் மாறுதலும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அதனால், நமக்கு அது சாதாரணமாகி விடுகிறது. கிடோ போன்ற கவிஞர்களால் ஆழ்ந்து கவனிக்கப்படுகிறது.


கேள்வி: ஹைக்கூ கவிதையில் கற்பனைக்கு இடமுண்டா?

பதில்: இதில் கற்பனைக்கு இடமில்லை. கவிஞன் தான் கண்ட காட்சியில் கற்பனையைக் கலக்காமல் அப்படியே தரவேண்டும். கவிஞன் வாழ்ந்து பெற்ற ஓர் அனுபவத்தைக் கற்பனை கலவாமல் மிகக் குறைந்த சொற்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. அது கண்டிப்பாக ஒரு செய்தியையோ அல்லது கருத்தினையோ சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், ஓர் அனுபவத்தைச் சொல்ல வேண்டும். சொல்ல வருவதைக் காட்சிப்படுத்துவது சிரமம்தான். தொடர் பயிற்சியும் விடாமுயற்சியும் பலன் தரும்.


கேள்வி: ஹைக்கூ எழுதுவது சிரமமானது என்று சொல்லப்படுகிறதே?

பதில்:  உண்மைதான். அதன் வடிவம் எளிமையானது. ஆனால், கவிதை எழுதுவது சிரமமானது. ஹைக்கூ இலக்கணத்தை உள்வாங்கிக் கொண்டு, குறைந்த சொற்களில், அணிகளின்றி,  ஓர் அனுபவத்தை அல்லது ஒரு காட்சியைக் கூர்ந்து நோக்கிப் பதிவு செய்வது சிரமம்தான்.அது விடுகதையாக, புதிராக, கேள்வி – பதிலாக அமைந்து விடக்கூடாது. எளிய உயிர்க்கு இரங்கல், இயற்கைக்கு மீளல் ஆகிய இரண்டு அடிப்படைக் கூறுகளில் கவனம் செலுத்தி கவிதை எழுதிப் பார்க்கலாம். ஹைக்கூவைச் செய்ய முடியாது. அது எங்காவது தென்படும். அதை அடையாளம் காண ஒரு தனிப்பார்வை வேண்டும் என்பார் அப்துல் ரகுமான்.

ஹைக்கூ எழுதும் கலை ஒரு நாளில் கைகூடி வராது. தொடக்க காலத்தில் நான் எழுதிய பல ஹைக்கூக்களை நீக்கியுள்ளேன். சிலவற்றைத் திருத்துகிறேன். தொடர்ந்து எழுதியும், எழுதியதைத் திருத்தியும் பொருந்தி வராததை நீக்கியும் செல்லும் போக்கே தரமான ஹைக்கூக்களை மலரச் செய்யும்.

கேள்வி: மலாய் மொழியில் ஹைக்கூ கவிதை எழுதப்படுகிறதா?

பதில்:  பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் முகமட் சாலே யாப்பார் ஹைக்கூ ஆய்வில் ஈடுபட்டு ‘Zen dan Haiku: Kini yang Abadi dalam Puisi’ எனும் நூலை வெளியிட்டுள்ளார். முகமட் அஃப்பாண்டி ஹசான் ‘Haiku in Malay’ எனும் கவிதை நூலை எழுதியுள்ளார். மலாய் இலக்கிய உலகில் ஹைக்கூ மீதான கவனம் குறைந்திருப்பதை உணர முடிகிறது.


கேள்வி: நீங்கள் எழுதும் ஹைக்கூ கவிதைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதா?

பதில்: 2007இல் தமிழகம், பொள்ளாச்சியில், நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பேசிய சாகித்திய விருதுபெற்ற கவிஞர் புவியரசு, என் ஹைக்கூ கவிதையொன்றைக் குறிப்பிட்டு என்னை முன்னே அழைத்து வாழ்த்தினார். அது என் ஹைக்கூ கவிதைகளுக்குக் கிடைத்த மறக்க முடியாத ஆதரவுக் குரலாகும். அந்தக் கவிதை இதோ:
        
                                 
  வாடகை வீடு மாறும் நாளில்
  அவள் நட்ட செடியில்
  சில பூக்கள்

சிங்கப்பூர் கல்வி அமைச்சின் ஏ லெவல் பாடத்திட்டத்தில் என் இரண்டு ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.



                                                        ஆர்.எச்.பிளித்

    
கேள்வி:       புதுவைக் கடற்கரை
                  சீறும் அலைகள்  
                  காந்தி சிலை 

 இந்தக் கவிதை எழுதிய உங்கள் அனுபவத்தைக் கூறுங்கள்.                        

பதில்:   ஒரு வாசிப்பில் இந்த மூன்று வரிகளில் ஒன்றுமில்லை என்று தோன்றலாம். ஒரு பயண அனுபவத்தைப் பதிவு செய்யும் சூழலில் எழுதியது இது. 2004இல் மலேசிய எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட இலக்கியப் பயணத்தில் புதுச்சேரியில் கண்ட காட்சியின் பதிவு இது. புதுச்சேரி சுற்றுலாத்துறை அதிகாரி ஆதவன், கடற்கரையோரம் அமைந்துள்ள காந்தி சிலை, ஆயி மண்டபம் ஆகிய இரண்டையும் காண அழைத்துச் சென்றார். இரவு நேரத்தின் அமைதியைக் கடல் அலைகள் உரக்கப் பேசிக் கலைத்தன. நான்கு மீட்டர் உயர காந்தி சிலை. அதைச் சுற்றி எட்டுத் தூண்கள். பிரெஞ்சு இராணுவம் புதுச்சேரியைக் கைப்பற்றி ஆண்டதற்கு இன்னும்  சான்றாக மூன்றாம் நொப்போலியன் ஆட்சியின்போது கட்டப்பட்ட ஆயி மண்டபம் உள்ளது. நகரெங்கும் பிரஞ்சு ஆட்சியின் அடையாளங்கள். சீறும் அலைகள் அந்நியர் படையெடுத்ததை எனக்கு அறிவிப்பதாகத் தோன்றியது. கடற்கரையோரம் உள்ள காந்தியின் சிலை, இந்திய மண்ணில் அந்நியர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர அகிம்சை வழியில் போராடி வென்ற மாபெரும் தலைவரை நினைவூட்டுவதாக உணர்ந்தேன். அன்று கண்ட காட்சியும் உற்ற உணர்வும் கலந்து செய்த படைப்பு இது.


கேள்வி: ஹைக்கூ எழுத விரும்புவோர்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்:  ஹைக்கூ உலகம் அற்புதமானது;  விரிவானது; ஆழமானது. இதுவரை எனக்குக் கிடைத்த அனுபவம் ஒரு துளி மட்டும்தான். இது வெறும் மூன்று வரி விவகாரம். ஹைக்கூவில் ஒன்றுமில்லை என்று புரியாமல் ஒதுங்கிப் போவோருக்கு ஹைக்கூ என்றும் புலப்படாது. 

ஹைக்கூ நினைக்க நினைக்க நெஞ்சில் இனிக்கும் அனுபவமாகும். இந்தப் பிரபஞ்சத்தின் மர்மங்களை, நாம் சாதாரணம் என்று நினைக்கும் அன்றாட நிகழ்வுகளை, மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளைத் திடீரென திரை விளக்கிக் காட்டும் ஆற்றல் கொண்டது ஹைக்கூ. ஹைக்கூ பற்றி பிளித் என்பார் கூறியுள்ள கருத்து நம் சிந்தனைக்குரியது. ஹைக்கூ நம்மைத் தட்டி அழைக்கும் கை; பாதி திறந்திருக்கும் கதவு; தூய்மையாகத் துடைக்கப்பட்ட கண்ணாடி ; இயற்கையின்பால் நம் கவனத்தை ஈர்க்கும் இலக்கிய வடிவம்; பேசாமல் பேசி நம் மனிதாபிமானத்தில் பங்கு கொள்ளும் இலக்கியச் சாதனம்.



                                                   ஹென்டர்சன் ஜி. ஹெரால்ட்


கேள்வி: ஹைக்கூ பற்றிய தெளிவுபெற ஆய்வு நூல்கள் உள்ளனவா?

பதில்: தமிழில் நிர்மலா சுரேஷ், லீலாவதி எழுதிய நூல்கள் ஹைக்கூ பற்றிய தெளிவைத் தருகின்றன. ஆங்கிலத்தில் ஆர்.எச். பிளித், கென்னத் யசூதா, ஹெண்டர்சன் ஜி.ஹெரால்ட் எழுதிய நூல்கள் உள்ளன. வில்லியம் ஜே.ஹிக்கின்சன் எழுதிய The Haiku Handbook என்ற நூல் ஒரு முழுமையான விளக்க நூலாகும்.

கேள்வி: நீங்கள் எழுதிய சில ஹைக்கூக்களைக் கூற முடியுமா?

பதில்:                              உணவைக் கொஞ்சம்
                                           சிந்தி உண்ணுங்கள்
                                           எறும்புகள் வரும் நேரம்
    
                                           முறிந்த மரக்கிளை
                                           எதையோ தேடும்
                                           தாய்க்குருவி

                                            புழுதிக் காற்று
                                            இலைகளில்
                                            பூச்சிகளின் தடயம்
                                   
                                             சோம்பல் மாணவன்
                                             பாறை இடுக்கில்
                                             தலைநீட்டும் செடி

                                             மழை பெய்தது
                                             நல்ல வேளை
                                             குடை இல்லை

                                           சாலையோர
                                           குடிசைகள் ஊடே
                                           கோயில் கோபுரம்





                                                 வில்லியம் ஜே.ஹிக்கின்சன்